Search This Blog

Saturday, June 13, 2009

எழுதாத உன் கவிதை


கவிக்குத் தலைப்பு தந்த நீ
முடியாத ஒன்றில் தான்
முடிந்து போனதாக
முதல் அத்தியாயம் எழுதி
"தொடரும்" இட்டார்கள்.

பின் வந்த நாளொன்றில்
உன் தோழர்கள்
முடியாததை 'முடி'யாக்கி
கிரீடம் சூட்டினர்.
"தொடரும்... தொடரும்..." எனத் தொடர்ந்த
உன் கவிதை அத்தியாயங்கள்
அன்றுடன் "முற்றும்" என இறுமாந்திருந்தோம்.

ஏமாற்றம் பரிசாக இம்முறை
மாற்றானே "தொடரும்..." இட்டான்.

இப்போது...
அந்தரத்தில் உன் எழுதி முடிக்காத கவிதை.
கூடவே நிரம்பி வழியும்
'சிவப்பு' மையுடன் ஒரு பேனா.
எழுதப்பட்ட வரலாறுகளின் மேல்
சாயம் பூசி அழிக்கப்படுமா...?
அல்லது
முடிவுரை எழுதி 'முற்றும்' இடப்படுமா...?

Sunday, June 7, 2009

செய்மதிப் படங்கள்

ஒரு சில மீற்றர் இடைவெளிகளில் அந்த இரு சோடிக் கண்கள் சந்தித்துக் கொண்டன. மூத்தவனுக்கு ஆச்சரியம், கோபம், கவலை... "இவன் வரக்கூடாதென்று தானே நான் வந்தேன். இப்போது இவன் இங்கே எதற்கு...?" ஆனாலும், இளையவனால் என்னதான் செய்ய முடியும்? எல்லாம் கை மீறி நடக்கின்ற பொழுதுகளில் கால் போன போக்கில் தானே பயணம்...

அன்றொரு நாள் தம்பி வரவில்லை என அழுதிருந்த ஓரிரவில் தான் மூத்தவன் முடிவெடுத்தான். அடுத்த நாள் இருவருக்குமான கடமைகள் மாறிக் கொள்ள இளையவன் வீட்டுக்கு வந்தான்.

"என்ர அப்பா... அம்மா... சகோதரங்கள் என்னவானார்கள்...? இவன் எப்ப வந்தவன்..? கண்டவர்களை எல்லாம் கேட்டபோதெல்லாம் எல்லோரும் சுகமென்று தானே சொன்னார்கள்." இளையவனுடன் கதைத்தால் ஆர்ப்பரித்து அழும் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கலாம். போகப்போகும் ஆன்மா கூட அமைதியாக போகலாம்.

ஆனால், இவனைக் கண்டதும் இளையவன் மெல்ல மெல்ல அப்பால் நகர்ந்து கொண்டிருந்தான். தோளின் சுமை அவன் நடை தள்ளாடலில் தெரிகிறது. மூத்தவன் அவனை நோக்கி இரண்டொரு அடி எடுத்து வைத்திருப்பான். வீழ்ந்திருந்த மனிதங்கள் காலில் தட்டுப்பட்டன. நகர முடியவில்லை... கடமையும் குறுக்கே வந்து தடுத்தது. சொல்லக் கூடாத செய்தியா...? அல்லது அண்ணனைக் காணக்கூடாத விரதமா...? "தம்பி... ஒருமுறையேனும் வந்து கதையடா...!!!" கத்த வேண்டும் போல் இருந்தது.

திடீரென கட்டளைகள் கிடைக்கின்றன. செவி அதிர எங்கும் புகைமண்டலம் பரவுகின்றது. அதனூடும் அந்த இரு சோடிக்கண்கள் ஒன்றையொன்று தேடுகின்றன.

அங்கே படம் பிடித்துக் கொண்டிருக்கும் செய்மதிகளின் படங்களில் எங்கே தெரியப் போகிறது இவர்களின் கதைகளும், வலிகளும்...

Tuesday, June 2, 2009

பதிவுகளில் தேடுதல் - Blog Search

நேற்று Google இடமிருந்து அந்த செய்தி வந்தது... பதிவுகளுக்குள் தேடும் பொறி வசதியானது இதுவரை காலமும் ஒரு சில ராஜாக்களின் பாவனைக்கு மட்டும் சோதனை நடவடிக்கையாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றிலிருந்து அனைத்து Blogger பயனர்களும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இது மாற்றம் பெற்றிருக்கின்றது.

பல கட்ட சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு வெளிவந்த இந்த பதிவுகளுக்குள் தேடும் வசதியானது பதிவுலகை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றது. இதுவரை காலமும் Google Custom Search வசதியினை தங்கள் தளங்களில் நிறுவியிருந்தவர்களும் அதனைத் தூக்கி எறிந்து விட்டு Blog Search வசதிக்கு மாறுகின்றார்கள்.


அப்படி என்னதான் புதிதாக இங்கு கிடைக்கின்றது?

நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தை இங்கு தேடல் மேற்கொள்ளும்போது உங்கள் வலைப்பதிவு, உங்கள் வலைப்பதிவில் இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு தளங்கள் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றில் தேடல் இடம்பெற்று கிடைக்கும் பெறுபேறுகளை தனித்தனியே வகைப்படுத்தி நேர்த்தியாக உங்களுக்குத் தருகின்றது.

தேடல் மேற்கொள்ள வேண்டிய இடங்களைக்கூட இதனை நிறுவும் போது கட்டுப்படுத்த முடியும். உதாரணத்துக்கு, உங்கள் வலைப்பதிவு தவிர்ந்த ஏனைய தளங்களில் தேடுதல் இடம்பெறுதலை நிறுத்திக் கொள்ள முடியும்.

வழமையாக ஒரு தேடலை நாம் Google Custom Search இனூடாக மேற்கொள்ளுமிடத்து அதற்கான பெறுபேறுகள் புதிதாக திறக்கப்பட்ட உலவிப்பக்கமொன்றில் தான் காட்டப்படும். ஆனால், இங்கு தேடலில் கிடைக்கும் பெறுபேறுகள் உங்கள் பக்கத்திலேயே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதாவது, வேறொரு தளத்துக்கோ அல்லது புதிதான பக்கத்துக்கோ உங்களை எடுத்துச் சென்று கவனக் கலைப்பானாக செயற்படாமல் நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த பக்கத்திலேயே தேடல் பெறுபேறுகள் காட்டப்படுகின்றன.


இதனை உங்கள் தளத்தில் நிறுவுவது எவ்வாறு?

மிக மிக இலகுவானது. எப்படி Blog இல் உங்களைப் பின்தொடர்பவரை இணைத்துள்ளீர்களோ அதே போன்று இரண்டொரு சொடுக்குகளின் மூலம் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
  • Edit your blog's layout, and click "Add a Gadget"
  • Select and configure the search box gadget

Google இன் உத்தியோகபூர்வத் தளத்தில் இப்படிச் சொல்லியுள்ளார்கள்.
The goal of this gadget is to expand the search capabilities of your blog and give your readers a better search experience.
புதிய தேடும் பொறியுடன் பதிவுலகம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

You might also like