Search This Blog

Sunday, September 20, 2009

பத்துக் கேள்விகளும் வந்தியத்தேவனின் பதில்களும் - 2

"வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது." - வந்தியத்தேவன்.

2006 ஜூலை தொடக்கம் இன்று வரை - மூன்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வருபவர் வந்தியத்தேவன். வலையுலகம் தொடர்பாக இவரி்டம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான தன் கருத்துக்களை பகிர்கின்றார். அதன் இறுதிப்பகுதி இது. முதல் பகுதியை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: இணையத்தில் அதிகமாக இந்தியச் சொற்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இலங்கைப் பதிவர்களும் பொருள் விளக்கமின்றி அச்சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து இசைவாக்கம் பெற்றுவிட்டார்கள் எனும் ஆதங்கம் ஒன்று எழுகின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வரும் உங்களின் இது தொடர்பான பார்வை...

பதில்: இணையத்தில் மட்டுமல்ல பொதுவாகவே தமிழகத்தில் பயன்படுத்திவரும் சொற்கள் குறிப்பாக சினிமாவில் பாவிக்கப்படும் சொற்கள் எம்மிடம் பரவுவது வழமை. முன்னர் நல்லாயிருக்கு என ஒரு விடயத்தை குறிப்பிட்ட நாம் இப்போது சூப்பர் என்கின்றோம் (சூப்பர் தமிழ்ச் சொல் அல்ல). அத்துடன் வடிவேல், விவேக் வசனங்களை சின்னவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்துகின்றோம், உதாரணமாக சப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே, எஸ்கேப் போன்ற வசனங்கள்.

இணையத்தைப் பொறுத்தவரை கும்மியடித்தல், மொக்கை போன்ற சொற்கள் தமிழகத்திடம் இருந்து பெற்றுக்கொண்டவையே. இவற்றை நம் பதிவர்கள் விளக்கமின்றிப் பயன்படுத்துகின்றார்கள் என்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் விளங்கியே பயன்படுத்துகின்றார்கள். அதே நேரம் இணையத்தில் கூடுதலாக தனித் தமிழில் பதிவுகள் காணப்படுவது சிறப்பு. காரணம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் என அனைத்தும் தமிங்கிலீஸ்க்கு மாறும்போது வலைப் பதிவர்கள் பெரும்பாலும் தனித் தமிழுடன் நிற்கின்றார்கள்.

சென்னைத் தமிழில் சொன்னால் வலையில் பீட்டர் விடும் பதிவர்கள் குறைவு. அதே நேரம் அவர்களுக்கு நம்மவர்களின் எழுத்து நடையும், வட்டாரச் சொற்களின் பயன்பாடும் இணையம் மூலம் தெரியவந்திருக்கின்றது என்ற உண்மையையும் மறக்ககூடாது.


கேள்வி: இலங்கையிலிருந்து இணையத்தில் எழுதுபவர்களை ஊடகங்கள் கணக்கில் எடுப்பதில்லையெனும் குற்றச்சாட்டு தொடர்பான உங்களின் கருத்து...

பதில்: இங்கே ஊடகங்கள் எனும் போது பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவை உள்ளடக்கப்படும். பத்திரிகைகளில் முன்னர் தினக்குரலில் இலங்கையைச் சேர்ந்த வலைப்பதிவர்கள் பற்றிய தகவல்கள் வந்தன. மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் இன்றும் இலங்கை வலைப்பதிவர் மட்டுமல்லாது ஏனைய சிறந்த வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் பற்றிய செய்திகள் வருகின்றது. சஞ்சிகைகளில் மல்லிகையில் பல காலமாக திரு.மேமன்கவி அவர்கள் "மின்வெளிதனிலே" என்ற தலைப்பில் வலைகள் பற்றி எழுதுகின்றார். அண்மையில் நடந்த இலங்கை வலைப் பதிவர் சந்திப்புப் பற்றி இந்த மாத மல்லிகையில் எழுதியுள்ளார். இருக்கிறம் சஞ்சிகை சில வலைப்பதிவர்களின் ஆக்கங்களை வெளியிட்டிருக்கின்றது, ஆனால் வலைப்பதிவுகள் பற்றிய விடயங்கள் வெகு குறைவு. அத்துடன் அங்கே ஆக்கங்கள் எழுதுபவர்கள் வலைப் பதிவர் என எந்த ஆதாரமும் அவர்கள் இடுவதில்லை.

மற்றும் படி வலைப் பதிவுகள் பற்றிய செய்திகளோ, வலைப் பதிவர் பற்றிய தகவல்களோ பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பெரும்பாலும் வருவதில்லை.

வானொலி மூலம் வலைப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினமான காரியம். பல பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருந்தும் வானொலியில் ஒன்றும் செய்யமுடியாத நிலை. இதற்கான விளக்கத்தை அவர்கள் தந்தால் நல்லது.

தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எங்கள் நாட்டுத் தொலைக்காட்சிகள் மெஹாசீரியலிலே பெரும்பாலும் தங்கியிருக்கின்றார்கள். இந்தியத் தொலைக்காட்சிகள் வலைப்பதிவர்களுக்கும் வலைப் பதிவுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நம் தொலைக்காட்சிகள் கொடுக்கவேயில்லை.

தொலைக்காட்சியினூடாக புதிய பதிவர்களை உள்வாங்குவது மிகவும் இலகு. காலை நேரத்தில் தலைவிரி கோலமாக நடத்தும் நிகழ்ச்சிகளில் இவர்கள் வலைப்பதிவுகளை அறிமுகப் படுத்தலாம் ஆனால் ஏனோ செய்வதில்லை. சில வேளைகளில் அவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் பிரபல பதிவர் கேபிள் சங்கர் அவர்கள் ஜெயா தொலைக்காட்சியில் வலைப் பதிவு பற்றிய பல கருத்துகளை ஒரு நேரடி ஒளிபரப்பின் மூலம் தெரிவித்தார்.

முதலில் வலைப் பதிவு என்றால் என்ன? எப்படி வலைப்பதிவு செய்வது? இணையத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஊடகங்கள் தெரிவித்தால் தான் மற்றவர்களுக்கும் இவை பற்றித் தெரியும். அதைவிடுத்து விட்டு நீங்கள் முதலில் ஆக்கபூர்வமாக எழுதுங்கள் பின்னர் ஊடகங்களைப் பார்க்கலாம் என்பது சின்னப் பிள்ளைத் தனமான கருத்து.

தினக்குரலில் பதிவர்கள் பற்றிய கட்டுரை வந்த நேரங்களில் பல வாசகர்கள் கிடைத்தார்கள் என்பது உண்மை.

அதே நேரம் இந்திய ஊடகங்கள் வலைப் பதிவர்கள் மேல் தங்களது பார்வையை வீசத் தொடங்கிவிட்டன. பல பதிவர்கள் விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளில் எழுதுகின்றார்கள்.

ஆனால் அந்த நிலைமை இங்கே இன்னும் வரவில்லை. பத்திரிகைகள், சஞ்சிகளைகளுக்கு கொடுத்த ஆக்கங்கள் பல அச்சேறுவதேயில்லை. ஆனால் வலையேறி பலரின் பாராட்டை பெறுகின்றது. இதற்கான காரணம் சிலவேளைகளில் வலைப் பதிவர்கள் பிரபலமாக இல்லாததுமாக இருக்கலாம்.

அத்துடன் மிகமுக்கியமான விடயம் வலைப்பதிவுக‌ள் ஏற்படுத்தும் தாக்கங்கள். அண்மையில் வெளியான கந்தசாமி திரைப்படத்திற்க்கு வலைப்பதிவர்கள் எழுதிய நேர்மையான நடுநிலையான விமர்சனங்கள் தயாரிப்பாளர்களையும், சில இயக்குனர்களை கடுப்பாக்கியிருக்கிறதாக ஒரு இணையம் செய்தி வெளியிட்டது.

வலைப்பதிவர் ஏனைய ஊடகங்கள் போல் சுமாரான படத்தை சூப்பர் என விமர்சிக்கவோ இல்லை நல்ல படத்தை குப்பை என விமர்சிக்கவோ இல்லை. அவர்கள் தங்கள் பாணியில் படத்தின் நல்லது கெட்டதுகளைச் சொல்கின்றார்கள்.

கேபிள் சங்கரின் திரைவிமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்க்க போகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

அடுத்ததாக இந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர் அணியின் உள்வீட்டு ரகசியங்களை வெளிக்கொணர்ந்த போலி ஐபிஎல் வீரரும் வலைப்பதிவர்தான்.

ஆகவே வலைப்பதிவர்களின் பதிவுகளினால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்டவர்களை எங்கள் நாட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளாதது கவலையளிக்கின்றது.


கேள்வி: மூன்று வருட உங்களின் இணைய எழுத்தில் சிறந்ததென நீங்கள் கருதும் உங்களின் படைப்பு ஒன்றும், நீங்கள் வாசித்ததில் இன்றும் நினைவிலிருந்து அகலாத படைப்பு ஒன்றும் கேட்டால்...

பதில்: நான் எழுதியவற்றில் பல படைப்புகள் எனக்குப் பிடித்திருந்தாலும் தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் என்ற படைப்பு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று நான் ஒரு கமல் ரசிகனாக இருப்பதால் அவரைப் பற்றி சுவையாக எழுதியது. இன்னொன்று சென்ற வருடம் தமிழ்மணம் நடாத்திய "தமிழ்மணம் விருதுகள் 2008" போட்டியில் காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) என்ற பிரிவில் பத்தாவது இடத்தைப் பிடித்தது. (இணைப்பு - http://awards2008.tamilmanam.net/polls/?p=9)

அதே நேரம் பலரால் பாராட்டப்பட்ட பதிவாக அண்மையில் மீள் பதிவு செய்த "வாசிப்பு ஒரு தவம்" என்ற பதிவைக் குறிப்பிடலாம்.

பல படைப்புகள் மனதை விட்டு அகலாது இருந்தாலும் சில மட்டும் ஏனோ இன்னமும் ஞாபகம் இருக்கும். கானாபிரபாவின் 2006 செப்டம்பரில் எழுதிய "அந்த நவராத்திரி நாட்கள்" என்ற பதிவு மனதில் நிற்க காரணம் அவர் அந்த நாளில் நாம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுகின்ற சரஸ்வதி பூஜை பற்றி மண் மணத்துடன் எழுதியிருந்தார்.

அத்துடன், மு.மயூரனின் சர்ச்சை ஏற்படுத்திய பதிவான அவர் 2005 மேயில் எழுதிய "கம்பன் விழா மேடைக்கு ஏன் கல்லெறிய வேணும்?" என்ற பதிவு. அந்தப் பதிவு மனதில் நிற்க காரணம் அந்த நாட்களில் எந்த நிகழ்ச்சி பற்றியும் எதிர்க் கருத்துகள் வராத போது மிகவும் துணிவுடன் மு.மயூரன் தன் கருத்துகளைக் கூறியிருந்தார். மு.மயூரன் என்றால் இன்றைக்கும் ஏனோ கம்பன் கழகம் மனதில் வந்துபோகும்.


கேள்வி: இணையத்தில் எழுத வந்ததன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்...

பதில்: மறக்கமுடியாத அனுபவம் என்றால் அது நிச்சயமாக பதிவர் சந்திப்புதான். சந்திப்பில் பேசியவைகள், விவாதித்தவைகள் எல்லாவற்றையும் விட பல நண்பர்களை எனக்குத் தந்திருக்கின்றது. இதில் சிலர் எனது பாடசாலை மாணவர்கள் என்பது இன்னும் பெருமை. இந்த நட்பு இப்போது தொலைபேசி உரையாடல்கள், ட்விட்டர் கும்மிகள், ஜீமெயில் அரட்டைகள், நேரடிச் சந்திப்புகள் என தொடர்கின்றது.

இவர்களில் பலர் என்னைவிட ஓரிரண்டு வயது குறைந்தவர்கள் என்பதால் தம்பியாகவே பழகுகின்றேன். தம்பி உடையான் படைக்கஞ்சான் என்பார்கள். எனக்கு இப்போ புல்லட், ஆதிரை, சதீஸ், கெளபாய் மது, சுபானு, நிமல், யோகா, மருதமூரான் (அறிவில் எனக்கு அண்ணன்), பால்குடி எனப் பல தம்பிகள் கிடைத்திருக்கின்றார்கள்.

அத்துடன் இந்த சந்திப்பின் மூலம் நிறைய நண்பர்கள் நேரடியாகவும் வலைமூலமும் நண்பர்களாயிருக்கின்றார்கள். குறிப்பாக சந்ரு, கீத், கரவைக்குரல், சினேகிதி, மயூரேசன், மாயா, மயூரன்(பல காலமாகத் தெரிந்தவர்), சயந்தன், டொன்லீ, சேரன், கனககோபி, யாழினி, சம்யுக்தா என நம்பவர்களின் பட்டியல் நீளும் (தவறவிட்டவர்கள் மன்னிக்கவும்).

இவர்களை விட உலகம் முழுவதும் இருந்து நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறார்கள். வலையைத் தாண்டி சிலருடன் நட்புகள் நீடிக்கின்றது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து என்னை ஊக்குவிக்கும் அத்துடன் என்னுடன் வலைமூலம் நண்பர்களாக இருக்கும் நண்பர்களின் பெயரைக் கூறினால் இன்னொரு பதிவு போடவேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன் இந்த இடத்தில் இருவரைக் குறிப்பிடவேண்டியது என் கடமை. வர்மா அவர்கள் என்னுடைய சகல பதிவையும் நான் எழுதுகின்ற காலத்தில் இருந்து படித்து தன்னுடைய விமர்சனங்களைக் கூறுகின்றவர். இன்னொருவர் லோஷன் என்னுடன் படித்தவர் இடையில் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றபடியால் சில காலம் சந்திக்காமல் இருந்துவிட்டோம், பின்னர் அவர் வலைஞனான பின்னர் தொடர்புகள் ஏற்பட்டது. என்னுடைய இன்னொரு நல்ல வாசகர். பதிவுகளை ரசித்துப் படிப்பதாக அடிக்கடி கூறுவார். இவர்களிருவரின் அக்கறைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகள்.


கேள்வி: இப்போது இலங்கையிலிருந்து பலர் இணையத்தில் எழுத ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்காக நீங்கள் கூறுவது...

பதில்: வரவேற்கத் தக்க விடயமாகும். இதன் தாக்கம் இலங்கைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட பல புதியவர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அத்துடன் அவர்களில் எழுத்துகளில் வித்தியாசமான கோணங்களில் இருக்கின்றன. ஆண் பதிவர்கள் பலதும் பத்தும் எழுதும்போது பெண் பதிவர்கள் பெரும்பாலும் கவிதைகளுடனேயே நின்றுகொள்கின்றார்கள்.

எதிர்காலத்தில் புதியவர்கள் மூலம் காத்திரமான படைப்புகள் வருகின்ற சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல, ஆனாலும் வலையுலகில் 3 ஆண்டுகள் குப்பை கொட்டியவன் என்ற வகையில் அவர்களுக்கும் சொல்லும் ஆலோசனை நிறைய வாசிக்கவும், திட்டமிட்டு உங்கள் படைப்புகளை எழுதவும், ஒரு விடயத்தில் மட்டும் நின்றுவிடாது பலதும் பத்தும் எழுதவும், முக்கியமாக உங்கள் ஆக்கம் தரமானதோ இல்லையோ என சந்தேகப்படாது முயற்சி செய்யவும்.

இதுவரை என்னுடைய உளறல்களை பதிவு செய்த நண்பர் ஆதிரைக்கு நன்றிகள் என்னுடன் மட்டும் நின்றுவிடாது பலரையும் பேட்டி வடிவில் அவர்களின் கருத்துக்களைக் கேட்டு பதிவுகள் இட அவருக்கு வாழ்த்துகள்.

நன்றி.

Wednesday, September 16, 2009

பத்துக் கேள்விகளும் வந்தியத்தேவனின் பதில்களும் - 1

"சிறுவயது முதல் நிறைய வாசித்தாலும் நான் ஒரு நாளும் இலங்கை எழுத்தாளர், இந்திய எழுத்தாளர் எனப் பேதம் காட்டியது இல்லை. செங்கை ஆழியானை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சுஜாதாவையும் பிடிக்கும். அதே நேரம் ஜனரஞ்சகமான விகடன், குமுதம் வாசித்தளவு இலங்கையின் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் சிறுவயதில் வாசிக்கவில்லை. சிரித்திரன் விதிவிலக்கு. பலகாலமாக வாசித்த சஞ்சிகை சிரித்திரன்." - வந்தியத்தேவன்.

2006 ஜூலை தொடக்கம் இன்று வரை - மூன்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து என் உளறல்கள் எனும் பெயரிலான வலைத்தளத்தில் எழுதி வருபவர் வந்தியத்தேவன். மயூரன் எனும் இயற்பெயர் கொண்ட இவரி்டம் வலையுலகம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பத்து வினாக்களில் மிகுதி ஐந்து வினாக்களும் அவற்றுக்கான வந்தியத்தேவனின் பதில்களும் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும்.



கேள்வி: அண்மையில் இலங்கைப்பதிவர் மு.மயூரன் அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட தொடர்பதிவில் நீங்கள் இணையத்தில் எழுத வந்த அறிமுகம் பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனாலும் உங்கள் பதிவுலக பிரவேசம் பற்றி அதனைத் தூண்டிய காரணிகள், ஞாபகமிருப்பின் நீங்கள் முதலில் வாசித்த தமிழ் வலைப்பதிவு, நீங்கள் பின்னூட்டல் கருத்திட்ட முதல் தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்லுங்கள்...

பதில்: 2005களில் எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின. மு.மயூரன், கானாபிரபா, சினேகிதி, மயூரேசன், சந்திரவதனா அக்கா, போன்றவர்களின் வலைகளைப் படித்திருக்கின்றேன் ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. காரணம் அப்போ எனக்கு பின்னூட்டம், பதிவு, அனானி போன்ற எந்த விடயமும் தெரியாது. அவர்கள் சொந்த டொமைனில் எழுதுகின்றார்களோ என்ற எண்ணம்.

2006ல் சும்மா இணையங்களை அலசி ஆராய்ந்ததில் தமிழ்நாடுடோல்க் என்ற விவாதக் களத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கே என் கருத்துகளைச் சொல்லும் போது நண்பர் லக்கிலுக் (யுவகிருஷ்ணா). நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள் ஏன் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்ககூடாது என என்னைக் கேட்டார். அவரின் தூண்டுகோளுடன் லெனின் என்ற இன்னொரு நண்பனின் ஊக்குவிப்பும் சேர 2006 ஜூலையில் என் முதல் பதிவு பிரசவமாகியது. என் பதிவின் முதல் வாசகர்களாக இவர்கள் இருவரையும் குறிப்பிடலாம்.

என்னை எழுதத் தூண்டிய காரணிகளாக அக்காலத்தில் எழுதிய பிரபலங்களான லக்கிலுக், கானாபிரபா, செந்தழல் ரவி, டிசே தமிழன், மு.மயூரன், சினேகிதி, ஊரோடி பகி, பாவை, சயந்தன், வசந்தன், தூயா, தேவ், சின்னக்குட்டி, சுப்பையா வாத்தியார், மறைந்த சிந்தாநதி அத்துடன் இன்னும் பலரின் வலைகளைப் படிக்கும் போது நானும் ஒருக்கால் எழுதிப்பார்க்கவோ என்ற எண்ணம் வந்தது. அதே நேரத்தில் லக்கியின் தூண்டுதலும் என்னை வலைப்பதிவிற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது. 

பாடசாலை நாட்களில் கட்டுரைகள், ஓஎல் பரீட்சையில் மட்டும் சிறுகதை எழுதிய அனுபவம் பின்னர் தகவல் தொழில்நுட்ப மாணவனாக இருந்து பத்திரிகைகளில் எழுதிய சில அது சம்பந்தப்பட்ட கட்டுரைகள், சில விளையாட்டுக் கட்டுரைகள் எனக்கு முன் அனுபவம் கொடுத்திருந்தாலும் இணையத்தில் எழுதுவது புதிதாகத் தான் இருந்தது. அதனால் தான் 2006ல் மட்டும் வெறும் 6 பதிவுகள்.

முதலில் பின்னூட்டம் இட்ட வலைப்பதிவு நிச்சயமாக லக்கியினுடையதாகத் தான் இருக்கும். அவர் தன் வலைப் பக்கத்தை மாற்றி அமைத்ததில் அந்தப் பின்னூட்டம் அறியமுடியாமல் இருக்கின்றது.

பின்னர் கானா பிரபாவின் மாம்பழம் பதிவில் என்னுடைய பின்னூட்டம் மூலம் அவரின் நட்பும் தொடர்பும் கிடைத்தது. இன்றுவரை அது ட்விட்டர் கும்மி வரை தொடர்கின்றது. 


கேள்வி: தமிழ்மண நட்சத்திரமாக இலங்கையிலிருந்து ஒளிர்ந்த ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர். தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் பற்றி...

பதில்: மிகவும் சுவாரசியமான கதை இது. 2008 செப்டம்பர் மாதம் புதிய புரொஜொட் ஒன்றுடன் அதிக வேலைப் பளுவுடன் இருந்த காலம். 2008 செப்டம்பர் 10ந்திகதி எனது மின்னஞ்சலுக்கு தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்னை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியிலிருந்து ஒக்டோபர் 4 ஆம் தேதிவரை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைத்த அஞ்சல் வந்திருந்தது.
எனக்கு முதலில் அதிசயம் காரணம் அந்தக் காலத்தில் மொத்தமாக வெறும் 60 பதிவுகள் மட்டும் தான் எழுதியிருந்தேன். ஆகவே யாரோ தமிழ்மணம் போல் மின்னஞ்சல் தயாரித்து என்னுடன் விளையாடுகின்றார்கள் என நினைத்து எதற்கும் சில நண்பர்களை இதைப் பற்றிக்கேட்போம் எனக் கேட்டால் அவர்கள் சொன்னார்கள். அந்த முகவரி போலியல்ல தமிழ்மண முகவரி தான் அதனால் நட்சத்திரமாக இருக்க ஒத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
நானும் நட்சத்திரமாக இருக்க சம்மதம் தெரிவித்து, அவர்களுக்கு மறுமொழி இட்டுவிட்டேன். திடீரென தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியிடம் இருந்து செப் 16ந்திகதி இன்னொரு மடல் என்னை செப் 29ந்திகதி அல்ல செப் 22ந்திகதி முதல் நட்சத்திரமாக இருக்கமுடியுமா? எனக் கேட்டிருந்தார்.
அவசர புத்தி என்னுடன் உடன் பிறந்தது என்பதால் நானும் அதற்கு ஒத்துக்கொண்டு செப் 22ந்திகதி முதல் 28ந்திகதி வரை தமிழ்மணத்தில் நட்சத்திரமானேன்.
அந்த நட்சத்திர வாரத்தில் என் வலையை மேய்ந்தவர்கள் எண்ணிக்கை முன்னைய நாட்களை விட அதிகம். அதுவரை பெரும்பாலும் சினிமா, விளையாட்டு, இடையிடையே கொஞ்சம் சீரியஸ் பதிவு, மொக்கைப் பதிவுகள் என பதிவிட்ட நான் அந்த வாரம் கொஞ்சம் நல்ல விடயங்கள் என நினைத்து சில பதிவுகளை இட்டிருந்தேன். கிட்டத்தட்ட 12 பதிவுகள் ஓரிரு பதிவுகள் தவிர ஏனையவை பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
சில பதிவுகளில் கொஞ்சம் சர்ச்சை ஏற்பட்டது. ஒருவர் நான் இலங்கையில் இருந்து எழுதினாலும் இந்திய சார்பு பதிவுகளே இடுகின்றேன் என எழுதியிருந்தார். அத்துடன் இலங்கை வலைப்பதிவாளர்கள் பற்றி நான் எழுதிய பதிவில் ஒரு சின்ன சர்ச்சை ஏற்பட்டிருந்தது அது பற்றி நான் இங்கே குறிப்பிடவிரும்பவில்லை. அந்தப் பதிவினைப் பாருங்கள் புரியும். (http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_24.html)
அத்துடன் நன்றி தெரிவித்து எழுதிய பதிவில் லக்கிலுக் "தமிழ்ப்பதிவர்கள் என்ற பெரும் குடையின் கீழ் இணையாமல் ஈழத்துப் பதிவர்கள் தங்களை இலங்கைப் பதிவர்கள் என்று சொல்லிக்கொள்வதாலும் இருக்கலாம் :‍)" என்ற விமர்சனத்தை வாசகர் தொகை அதிகரித்திருந்தாலும் பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை என நான் ஆதங்கப்பட்டிருந்த விடயத்துக்கு விமர்சனமாக எழுதியிருந்தார். அதற்கான பதில் அந்தப் பதிவில் இருக்கின்றது. (http://enularalkal.blogspot.com/2008/09/blog-post_1627.html)
அந்தக் காலத்தில் பின்னூட்டப் போதை எனக்கு இருந்தது. இப்போ ஏனோ அது இல்லை. சயந்தன் ஒரு பதிவில் குறிப்பிட்டதுபோல் முத்தி நிலை அடைந்துவிட்டனோ தெரியவில்லை. அதனால் தான் அதிக பின்னூட்டம் எதிர்பார்த்தேன், இதனைப் பற்றிப் பெயரிலியும் குறிப்பிட்டிருந்தார்.
நிறைய புதிய நண்பர்களுடன் கொஞ்சம் சர்ச்சைகள் என தமிழ்மண வாரம் மகிழ்ச்சியாகவே சென்றது. அந்த மகிழ்ச்சியான நினைவுகளை நினைவூட்டிய இந்தக் கேள்விக்கு நன்றி. 


கேள்வி: உங்களுடைய பதிவுகள் இந்தியா, சினிமா தொடர்பாக பேசிய அளவு இலங்கையைப் பற்றி - எங்களின் வாழ்வுகளைப்பற்றி பேசவில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைத்தால் உங்களின் பதில்...

பதில்: இந்தக் குற்றச்சாட்டை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கான காரணமாக நான் வலைப்பதிவராக மட்டுமல்ல ஒரு வாசகனாகவும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். சிறுவயது முதல் நிறைய வாசித்தாலும் நான் ஒரு நாளும் இலங்கை எழுத்தாளர், இந்திய எழுத்தாளர் எனப் பேதம் காட்டியது இல்லை. செங்கைஆழியானை எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு சுஜாதாவையும் பிடிக்கும். அதே நேரம் ஜனரஞ்சகமான விகடன், குமுதம் வாசித்தளவு இலங்கையின் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் சிறுவயதில் வாசிக்கவில்லை. சிரித்திரன் விதிவிலக்கு. பலகாலமாக வாசித்த சஞ்சிகை சிரித்திரன்.
அத்துடன் பள்ளி நண்பர்கள் முதல் கொண்டு ஊர்ப் பொடியள் வரை அந்த நாளில் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதரவாளர்கள் (83 உலகக் கிண்ணம் எனக்குள் கிரிக்கெட் பார்க்கும் வெறியைத் தூண்டியது), ஆகவே விளையாட்டு என்றால் கிரிக்கெட் இந்திய அணி என இந்தியாவின் மேல் பாசம் நிறைந்திருந்த நாட்கள் அவை.
அத்துடன் சினிமாவும் எனக்கு நிறையப் பிடிக்கும் நல்ல சினிமாக்களைத் தேடிப்பார்க்கும் ரசிகன். ஆகவே சினிமா பற்றிய பதிவுகள் அதிகம் இடக் காரணம் இவைதான்.
இலங்கையைப் பற்றி அல்லது எங்கள் வாழ்க்கைகள் பற்றி ஆரம்பகாலங்களில் நான் எழுதாமல் இருக்க காரணம் அந்த நாட்களில் என்னுடைய எழுத்துக்களை அதிகம் படித்தவர்கள் தமிழக நண்பர்கள். ஆகவே அவர்களுக்காக அவர்கள் பாணியில் எழுதினேன். அத்துடன் ஒரு சிலரைத் தவிர ஏனைய புலம் பெயர் நம் உறவுகள் எனது வலையைப் படித்ததாகவோ பாராட்டியதாகவோ ஞாபகம் இல்லை.
அத்துடன் அரசியல் பற்றி எழுத எனக்கு விருப்பவில்லை. இலங்கை என்றால் அரசியல் என இருந்தகாலம் அது. ஆனாலும் இலங்கைக் கிரிக்கெட் பற்றியும் என்னுடய சில அனுபவங்களும் எழுதினேன். மற்றவற்றுடன் ஒப்பிடும் போது எண்ணிக்கை மிகவும் குறைவு.
பின்னர் இந்த ஆண்டில் கானாபிரபாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்துமுற்றத்தில் என்னுடய ஈழம் சார்ந்த அல்லது இலங்கை சார்ந்த வட்டார வழக்குகள், பண்பாடுகள் பற்றிய பதிவுகள் வெளிவந்தன. எங்கடை தமிழில் எழுதுகின்ற வாய்ப்பு அங்கே எனக்கு கிடைத்தது. இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும், என்னுடைய எழுத்து வித்தியாசமாக இருந்தாலும் பேச்சுத் தமிழ் என வரும்போது கொழும்பில் பல காலம் இருந்தாலும் இன்னும் யாழ்ப்பாணத் தமிழே வருகின்றது.

என்னுடைய வலையில் இலங்கை வாசகர்கள் பலர் அந்த நாட்களில் குறைவு ஆகவே இலங்கை விடயங்கள் எழுதுவது மிகவும் குறைவு. ஆனால் இன்றோ பல இலங்கை வாசகர்கள் இருப்பதால் இலங்கை விடயங்கள் எழுதப்படும் போது நிறைய விமர்சனங்கள் வருகின்றது. இதற்க்குச் சான்றாக அண்மையில் எழுதிய பகிடி வதை, பாடசாலைகளில் மதம் பற்றிய பதிவுகள் சான்றாகும்.
தற்போது இலங்கை பற்றி எழுதுவதால் தான் முதலில் இந்தக் குற்றச்சாட்டை ஓரளவு ஏற்கின்றேன் என்றேன்.


கேள்வி: 2006 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வருகின்றீர்கள். ஆனால், அண்மைய நாட்களில் நீங்கள் இடுகின்ற பதிவுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக் காட்டுகின்றது. இதற்கு குறிப்பிடும் படியான காரணங்கள் எதுவும் உண்டா?

பதில்: இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். 
  1. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கல்விக்காகவும் வேலைக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றமை. ஏனென்றால் முன்னைய நாளில் வேலை முடிந்த பின்னர் எங்கள் வேலை காலி வீதியைச் சுற்றுவதே. சிலவேளைகளில் எங்கள் உலாத்தல்கள் இரவு 10 மணி வரை கூட நீடிக்கும். ஆகவே பதிவு எழுதுவது கிழமைக்கு ஒன்று அல்லது மாதத்திற்கு ஒன்று ஆனாலும் வலையுலக நுண்ணரசியல்கள், போலிப் பிரச்சினைகள், எனப் பலவற்றையும் தமிழ்மணம் மூலம் அறியக்கிடைத்தது. நான் பதிவு எழுதாவிட்டாலும் பலரின் பதிவுகள் படித்து என் கருத்துகளை தெரிவிப்பது பழக்கம்.
  2. அடுத்த காரணமாக என்னுடைய வாசகர் வட்டம் கொஞ்சம் பெரிதாகி விட்டது. இதற்கான ஒரு காரணம் இலங்கைப் பதிவர் சந்திப்பு. அத்துடன் பலர் இன்றைக்கு வலையுலக நண்பர்களாக இருப்பதால் என்னுடைய பதிவுகளை விரும்பிவாசிப்பதை அறிந்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் பாராட்டுக்களும் என்னை அதிகம் எழுதவைத்தன.

கேள்வி: இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததன் பின்னர், நீங்கள் எழுதுகின்ற இடுகைகள், உங்களுக்கு கிடைக்கின்ற பின்னூட்டல் கருத்துக்கள், உங்கள் தளம் நாடி வருபவர்கள்... இவைகள் தொடர்பான தங்களின் கருத்துக்கள்...

பதில்: இலங்கைப் பதிவர் சந்திப்பின் பின்னர் என்னுடைய வலைக்கு மட்டுமல்ல சந்திப்பில் கலந்துகொண்ட பலரின் வலைக்கும் வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக அறிந்தேன். இதற்கான காரணம் இதுவரை இலைமறை காயாக இருந்த பலரின் வலைகள் பரவலாக அறியப்பட்டமையும், அத்துடன் இவர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக அறிமுகமானபடியால் தங்கள் நட்பை வளர்க்க வலைகளினூடான கருத்துப் பரிமாற்றத்தை செய்துகொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.
இன்னும் சொல்லப்போனால் சந்திப்புக்கு முன்னரே சில இலங்கைப் பதிவர்கள் என்னுடைய வலையில் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள். சந்திப்பின் பின்னர் பின்னூட்ட இடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பலர் நட்பு ரீதியிலும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றார்கள். இதனை நீங்கள் என்னுடைய பி்ன்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும் அறிந்துகொள்ளமுடியும். சந்திப்புக்கு முன்னர் 20 ஆக இருந்த பின்தொடர்பவர்கள் இன்றைக்கு கிட்டத்தட்ட 60 ஆக உயர்ந்திருக்கின்றது. ஏனைய மூத்த பிரபல பதிவர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
பின்னூட்ட கருத்துக்களைப் பொறுத்தவரை 2006ல் இருந்து என்னை ஊக்கப்படுத்துபவர்கள் பலர் இன்றைக்கும் தங்கள் பின்னூட்டங்களை இட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். வெறுமனே பாராட்டாமல் தங்கள் கருத்துகளைச் சொல்லி பின்னூட்டங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றங்களுக்கு வகை செய்கின்றார்கள். புதியவர்களுக்கும் இது பொருந்தும். 

-- தொடரும்

Thursday, September 10, 2009

ஏறி வந்த கதை - ஒரு அஞ்சலோட்டம்

அஞ்சலோட்டம்... கல்லூரி விளையாட்டுப் போட்டியில் ஒருமுறை ஓடியிருக்கின்றேன். அதுவும் பழைய மாணவர்களுக்கான நிகழ்ச்சி. முதலில் கிடைத்த கோலை இறுதியாகச் சென்று கொடுத்த பெருமையும் என்னையே சாரும்...

அதே போல், என் பள்ளிக்கால நண்பன் கீத் தந்து விட்ட தொடர்பதிவை கரை சேர்க்க 13 நாட்கள் எடுத்திருக்கின்றேன். சில அவசரமான - காத்திரமான நாட்களுக்குள் சிக்குப்பட்டதால், இன்னமும் மீளாவிட்டாலும் இன்று என் வரலாற்றுக் கடமையை (:D) செய்யத்துணிந்துள்ளேன்.



எழுத வேண்டுமென பேனாவும் தூக்கிக் கொண்டு நான் நேரடியாக பதிவுலகத்திற்குள் தொப்பென்று குதிக்கவில்லை. நீண்ட நாள் வாசகனாக இருந்து பத்தும் பலதையும் - நல்லதையும் கெட்டதையும் - அரசியலையும் ஆன்மிகத்தையும் வாசித்திருக்கின்றேன். ஆனாலும், சாத்திரம் பார்த்ததாக ஞாபகம் இல்லை. இந்தப் பதிவுலக வாசிப்பு காதலா.கொம், Hi5 போன்ற தளங்களையும் அதற்குரிய கடவுச் சொற்களையும் மறக்கச் செய்யும் அளவுக்கு வெறி பிடித்து இருந்திருக்கின்றது.

பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ நாளொன்றுக்கு 12 மணித்தியாலம் கிடைத்த இலவச இணைய வசதி தான் பல தளங்களை அறிமுகம் செய்திருகின்றது. எப்படிப் போனேன் என்று ஞாபகம் இல்லை. இணையத்தில் மூழ்கியிருந்த வேளையில் தட்டுத்தடுமாறி என் கண்களுக்குத் தட்டுப்பட்டது... நிமல்
வைத்திருக்கும் வலைப்பதிவாக, அல்லது பகீயின் ஊரோடியாக, அல்லது சயந்தனின் சாரலாக இருக்க வேண்டும். இல்லாதுவிடின், மூன்றும் ஒரே நேரத்தில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், குறுகிய கால இடைவெளியில் முத்தளங்களையும் வாசித்து வியந்தேன். அப்படி வாசித்தவைகளில் இன்றும் முந்திக்கொண்டு ஞாபகத்துக்கு வருவது சயந்தனின் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்.

சயந்தன் சாரல் என சொந்தத் தளமொன்றுக்கு மாறினாலும் (பின்னர், அத்தள முகவரியும் மாற்றப்பட்டது. இப்போது, http://www.sajeek.com) Google இனால் இலவசமாக வழங்கப்படும் blogspot இனை நோண்டிப்பார்க்கத்தொடங்கினேன். என் பங்குக்கு கவிதைகள் என ஏதோவெல்லாம் கிறுக்கி தரவேற்றியிருந்தாலும், இன்றும் கூட அவ்வலைத்தள முகவரிகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஞாபகம் இருக்கின்றது.. பல்கலை இறுதி வருடத்தில் சொந்தமாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து, அதில் ஒரு பதிவிட்டு இணைய இணைப்பில் இருந்த கானா பிரபா அண்ணாவுக்கு அனுப்பினேன். எனக்கு முதன் முதல் பின்னூட்டிய பெருந்தகையோன் அவரே தான். ஆனால், கொடுமை என்னவென்றால்... ஒரு டிசம்பர் (2007) மாதத்தில் எழுதப்பட்ட அந்தப்பதிவும் பிரபா அண்ணாவின் பின்னூட்டமும் இப்போது என் தளத்தில் இல்லை.

என் முதல் பதிவும் நம்மைப் போன்று பல காலம் தனித்திருந்து காணாமல் போனது. சோம்பலும், நேரமும் எழுதுவதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும், இக்காலத்தில் கௌபாய் மதுவின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்ப்பூங்காவில் சில பதிவுகள் இட்டிருக்கின்றேன்.

இந்த நேரத்தில் தான் இறைமைமிக்க இலங்கைத் திருநாட்டிலிருந்து ஒருத்தர் வலைபதிய வந்தார். இவன்தானடா சிங்கம் சிக்கெனப் பிடியென... அவரின் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிட்டுக் கொண்டு - என் வலைப்பதிவு ஆசையின் பரீட்சார்த்தத்தை லோஷன் அண்ணாவின் பின்னூட்டப் பெட்டிகளில் சோதித்துக் கொண்டிருந்தேன். ஆனால்... ஆனால்... அது ஒரு சனிக்கிழமை நடந்தது. பயம் துரத்த ஓடிச்சென்று என்னுடைய பயனர் கணக்கை முடக்கிவிட்டேன்.

ஆனாலும், சில நாட்களின் பின்னர் புதிதாக புதுத்தளத்துடன் நானும் எழுத வேண்டும் என்ற வைராக்கியம் மேலிட பதிவுலகத்துக்குள் வந்து சேர்ந்தேன்.

இந்தப் பதிவுலகம் எனக்குப் பல பாடங்களை சொல்லித்தந்திருக்கின்றது. சில பெறுமதியான நண்பர்களின் நட்புக்களினைப் பெற்றுத் தந்திருக்கின்றது. கடல் கடந்தும் என் நலம் விசாரிக்கும் உறவுகளைப் பெருக்கியிருக்கின்றது... இவங்கள் எல்லாம் பென்னாம் பெரிய மனுசங்கள், கிட்டக் கூட நெருங்க முடியாது என நான் எண்ணியவர்களுடன் நள்ளிரவு தாண்டியும் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன், இன்னும் சிலரின் உண்மை முகங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. என்னால் தான் நடைபயின்றோம் என வாக்குமூலம் கொடுக்கும் பால்குடி, கீத் போன்றோரை எண்ணி பெருமை கொள்கின்றேன்.


எழுத்துருக்கள்
ஆரம்பத்தில் பாமினி எழுத்துக்களையே நான் பாவித்தேன். ஆனாலும்,
அம்மாவை amma என எழுதுவது பொருத்தமற்றது என வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கு இம்முறை இலகுவானதாகப்பட்டதால் போனோட்டிக் முறைக்கு மாறி இன்றும் கூட அப்படியே எழுதுகின்றேன்.

பதிவர் சந்திப்பில் இது தொடர்பான சர்ச்சை கிளப்பப்படும் வரை இதன் "சீரியஸ்" தன்மையை நான் உணரவில்லை. துரதிஸ்டவசமாக முன்னைய பதிவுகளை நான் ஆழமாக வாசித்திருக்கவுமில்லை.

நான் எழுதும் முறையில் சொல்லின் இடையில் ஓரெழுத்து தடம் புரண்டால் அந்த எழுத்தை மட்டும் சீர்திருத்தி சொல்லின் வளம் பேணுவதில் கடினத்தன்மையை உணர்ந்திருக்கின்றேன். முற்றாக அந்தச் சொல்லை நீக்கியபின் புதிதாக எழுதுவதுதான் ஒரே வழி என்பதை பல இடங்களில் பிரயோகித்திருக்கின்றேன். பாமினி எழுத்துருவுக்கு அச்சிக்கல் இல்லையென புல்லட் சொன்னார்.

இது தொடர்பான சர்ச்சைகளுக்கோ அல்லது விவாதங்களில் மூக்கை நுழைக்கவோ எனக்கு அதிக வாசிப்புக்கள் தேவைப்படுகின்றன. தேவையான தரவுகளும், அதற்கான சுட்டிகளும் இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் உள்ளன. அதை ஆறுதலாக வாசித்தபின் என் கருத்துக்களை பதிவிடுகின்றேன் எனக் கூறி இப்போதைக்கு நழுவுகின்றேன்.

விதிமுறைகளுக்கு முரணாக பதினொருவரை விளையாட்டுக்கு அழைத்த சகோதரி சினேகிதிக்கு வன்மையான கண்டனங்களை பதிந்த வண்ணம் இவர்களை அஞ்சல் ஓட்டத்துக்கு அழைக்கின்றேன்.
டொக்டர் ஜீவராஜ் - ஜீவநதி
தர்ஷாயணீ - உறுபசி
ஹிஸாம் - உணர்வுகள்
குணா - நிழல்

You might also like