இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அது தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடங்கும் முன்னரே இன்னொரு தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி விட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி வசம் குவிந்து இருந்தாலும், நாடாளுமன்றுக்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம் போலவே பல்டிகள், பேரம் பேசல்கள், தாவல்கள், குழிபறிப்புக்களும் உச்சக்கட்ட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன.
சபிக்கப்பட்ட இனமாக - நிர்க்கதி நிலையிலுள்ள தமிழினம் இத்தேர்தலில் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் உலகிற்கு ஓர் செய்தியை உரத்துச் சொல்ல வேண்டுமென்ற வழக்கம் போன்ற கோசங்களை புத்திஜீவிகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் நித்திரை போன்று நடிக்கும் உலகிற்கு எத்தனை தடவைகள் உறைக்கச் சொல்வது...? ஆனாலும், மக்கள் பிரதிநிதித்துவம் கைநழுவிப் போவதைத் தடுக்கவேணும், வாக்களிக்க வேண்டிய நிலைமை - கட்டாயம் ஒவ்வொரு ஈழத் தமிழன் தலையிலும் கட்டப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் இருபத்திரண்டு தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த தமிழ்மக்கள் இப்பொதுத்தேர்தலில் என்ன செய்யப் போகின்றார்கள்...? என்ன சொல்லப் போகின்றார்கள்...?
ஆண்டவன் வந்து தலையால் நடந்தாலும் கூட இந்த இருபத்திரண்டு என்கின்ற வடக்கு கிழக்கின் அறுதிப் பெரும்பான்மை இப்பொதுத்தேர்தல் முடிவுகளில் தமிழ்க்கூட்டமைப்புக்கு கிடையாது என்பது மட்டும் உறுதி. தமிழ்மக்களின் தாயகப்பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெறப்பட்ட முடிவுகளின் பின்னர் ஒரு சில கட்சிகளின் அத்திவாரங்கள் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் இருப்பினை இப்பொதுத்தேர்தலில் உறுதிப்படுத்த முயலலாம். அது மட்டுமன்றி, தமிழ்க்கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குத்துவெட்டுக்களும் கணிசமான வாக்குப் பிரிப்பினை ஏற்படுத்தப் போகின்றன.
இனி எவர் முயற்சித்தாலும் தமிழ்க்கூட்டமைப்புக்குள் உண்டான சிதறல்களை பொருத்தி அழகுபார்க்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் கூட்டமைப்புக்குள் இருந்து புடுங்கி எறியப்படும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலகுவாகப் பட்டியலிட முடியும் என்ற நிலை.
கடந்த தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட, மாவட்ட முதன்மை வேட்பாளர்களாக போட்டியிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் தட்டுத்தடுமாறி ஆசனங்களைப் பிடித்தனர். இந்நிலைமை எதிர்வரும் தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கலாம். ஆனால் இத்தடவை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் வெற்றுக் கோசங்களினால் ஏமாற்றாத, கண்ணியமான, பொறுப்புணர்ந்த, உண்மையான, கல்வியியலாளர்கள் என கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தர் அவர்கள் தருகின்ற உறுதிமொழிச் சான்றிதழ் உண்மையானால் நல்லதே....!!! வெற்றுக் கோஷங்கள் வலிகளை விதைத்ததே தவிர... வழிகளைக் காட்டவில்லை!!!
தயாரிக்கப்பட்ட / தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க்கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் மறுக்கப்பட்ட முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் கிஷோர், கனகரட்ணம், சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி, கஜேந்திரன், பத்மினி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என ஊடகங்கள் சில பட்டியலிடுகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறாக தனித்துப் போட்டியிட்டதன் மூலம் சிவாஜிலிங்கமும், அவருக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக சிறீகாந்தாவும் அவர்கள் சார்ந்த ரெலோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டது யாவரும் அறிந்ததே...அதற்குப் பின்னும் அவர்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
நான் மலையாக நம்பி நின்ற சம்பந்தர் ஐயா மடுவாக மாறிவிட்டார் என குற்ற வாக்குமூலம் கொடுத்த தங்கேஸ்வரி மட்டு மாவட்டத்தில் ஆளும்கட்சி வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளாராம்.
இன்னும் இருவர்... செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன். கடந்த பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று, யாழ் மாவட்டத்தில் அமோக வெற்றியீட்டி பாராளுமன்றம் சென்றவர்கள். இவர்கள் இருவருக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த இரகசியம்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த தமிழ்க்க்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தர், வடக்கு கிழக்கு தாயக மக்களின் கருத்துக்களை ஏற்று, அங்குள்ள பல்கலைக்கழக ஒன்றியங்கள், கல்வியியலாளர்களின் ஆலோசனைப்படியே 2010 பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஆக, சம்பந்தரைப் பொறுத்தவரை, தாயகமக்களின் விருப்பின் அடிப்படையில் அமைந்ததே தமிழ்க்கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்.
ஆனால், புலம்பெயர் தேசங்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு நிலையினைக் காணலாம். தமிழ்த்தேசியத்தலைமையென தங்களுக்குத் தாங்களே பெயர் சூட்டிக் கொண்ட சம்பந்தர் போன்றவர்கள் கஜேந்திரன், பத்மினி போன்றோரை சந்தர்ப்பம் பார்த்து வேண்டுமென்றே கழட்டி விட்டுள்ளார்கள் எனும் படியான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள்; சம்பந்தரின் முடிவு அராஜகமானது என குற்றம் சுமத்துகின்றார்கள்.
சம்பந்தர் துணைக்கழைக்கின்ற தாயகமும், புலம் பெயர் தேசமும் இங்கே எதிரெதிர்த் திசைகளில் முட்டி மோதுகின்றன.
கடந்த பொதுத்தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற கஜேந்திரன் மற்றும் பத்மினி உட்பட எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பினால் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேறு கட்சிகளுடன் இணைந்து அல்லது சுயேட்சையாகவேனும் போட்டியிடுவார்கள் எனும் நிலை இப்பொதுத் தேர்தலில் ஏற்படலாம்... அப்போது தாயக மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு சம்பந்தருக்கும்... புலம் பெயர் தேசத்துக்கும் கனதியான விடயங்களைப் புரிய வைக்கும்...!!!
இறுதியாக ஒரு வேண்டுகோள்:
தமிழ்க்கூட்டமைப்புக்கு இனியாவது இளைய இரத்தம் பாய்ச்சுங்களேன்... அல்லாது விடின், வேறு வழிகள் விரிந்திருக்கின்றன...