Search This Blog

Sunday, April 25, 2010

அங்காடித்தெரு


வசந்தபாலன், பிளீஸ்... இனியும் இப்படியொரு படம் வேண்டாமே...!!!

வயிற்றுப் பிழைப்புக்காக கால்களில் சில்லுப் பூட்டிய மாந்தர்கள், முதலாளித்துவத்தின் கொடுமை, வறுமையின் பிரதிபலிப்பு, அதனூடு சேர்ந்து உண்மையான - போலியான காதல்கள் என அங்காடித்தெரு சொல்ல வந்த யதார்த்தங்கள் அத்தனையும் உண்மைதான்... பேசப்படவேண்டியவைதான்.

அதற்காக படம் முழுவதும் செத்தவீடா...? சாவு... சாவு... ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓருயிர் கொடூரமாக விழுகின்றது. வேண்டாம் சார்... தியேட்டரில் இருக்கின்றோமா காசு கொடுத்து செத்த வீட்டுக்கு வந்தோமா என்ற உணர்வு எழுகின்றது. பரிதாபங்களையும், அனுதாபங்களையும் தான் சேகரிக்க முடிகின்றது.

ஆனாலும், கனாக்காணும் காலங்கள் புகழ் பாண்டியின் அந்தக் குசும்பு பிடித்திருக்கின்றது. காதல்க்கவிதை எழுதத் தெரியாமல் ஒருத்தன் படும்பாட்டை நான் பட்டபாடாய் ரசிக்க முடிகின்றது. ஒன்பதாம் வகுப்புத் தேவாரத்தின் அடிவரியில் தன் காதலியின் பெயரை எழுதி காதல் கவிதையாய் ஒப்புவிக்கும் வல்லமையை எனக்கும் தருவாயாக...!!!

Saturday, April 24, 2010

நாடு கடந்த அத்திவாரம்



எங்களிடம் அழகான வீடொன்று இருந்தது
உயிரை விலை கொடுத்து கட்டி வைத்தோம்!!!
புயல் பல தீண்டியும் புழுதி வாரி இறைத்தும்
அழகு குன்றாது அது நிமிர்ந்து நின்றது...!
ஆனால்,
நேற்று அடித்த புயல் அதைக் கொன்று போனது
அத்திவாரத்தையும் ஆட்டி வைத்தது,.
இன்று...
மீண்டும் அந்த வீட்டுக்கனவுடன்...
வட்டுக்கோட்டையில் கூரை...
நாடு கடந்து அத்திவாரம்...
தாயகத்தில் க(கூ)ட்டமைப்பு...
இவையெல்லாம்
ஒரு புள்ளியில் சந்திக்காதவரை
விழலுக்கு நீர் பாய்ச்சுகின்றோம்...!!!

Sunday, April 4, 2010

தடித்த எழுத்துக்களில் இந்நாள்


எதிர்பார்க்காது தற்செயலாக நடக்கின்ற சில சம்பவங்கள் வாழ்க்கையில் பாரிய அத்தியாயத்தை தொடக்கிவிட்டுச் சென்று விடக்கூடியன. நேற்றுவரை இதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்று நம்பி இருந்த என் மனதை என்னவென்று அழைப்பது? பைத்தியக்காரன் என்று என்னை நானே திட்டிக் கொள்வதைத் தவிர...

நாட்காட்டியிலும் சரி, என் தினக்குறிப்பேட்டிலும் சரி இன்றைய நாளை தடித்த எழுத்துக்களினால் குறித்து வைத்துவிட்டு நாளைய நாளுக்குள் நுழைகின்றேன்.

நேரம்: காலை XX : XX
திகதி: 04 - 04 - 2010

என் டயரியிலிருந்து...

Thursday, April 1, 2010

வீதிக்கு வந்த மாடுகள்


பால் சொரியப் போகின்றனவாம் - வீட்டு முற்றத்தில்
கால் பதிக்கின்றன மாடுகள்...!!!
சில பழக்கப்பட்டவை - கோடிகள் பேசி
பல இறக்கப்பட்டவை...!!

நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது
றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.
ஒட்டாது என்ற சிவலையும் கறுவலும்
கூட்டாக வந்து குடும்பம் நடத்துகின்றன.
ஒரு மடியில் தாகம் தீரக் குடித்தவைகளும்
வேறு திசைகளில் நடையைக் கட்டுகின்றன.

கொம்புகளை மறைத்து, மடியினை நிரப்பி
தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்
உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்
எங்கள் இரத்த வாடையன்றோ...
தாவர உண்ணிகளுக்குள்ளும் என்னால்
மாமிச உண்ணிகளை காண முடிகின்றது...

நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!
காலை விடிந்ததும் கன்றுகளும் கூடி வர
எல்லை கடந்திடுவீர் பெட்டி பொட்டலங்களுடன்...
அதற்கும் மட்டும்,
வென்றவர் தோற்றவர் சட்டம் கிடையாது...
ஆறு வருடங்களின் பின்னரும்
ஆறாத காயத்துடன் என்வாசல் திறந்திருக்கும்...
பால் சொரிய வருவீர்கள் என்ற வரட்டு நம்பிக்கையுடன்...!!!

- ஆதிரை

You might also like