![](http://2.bp.blogspot.com/_OayCEnRHAWM/SfNQGtRq_eI/AAAAAAAAC5A/xX4T4P65paI/s400/kadaleri_karunanithi.jpg)
ஆனாலும், தவிர்க்க இயலாத காரணமாய் இன்று உங்கள் ஞாபகம் என் மனதில் வந்ததன் பிரதிபலிப்பாய் இதை எழுதுகின்றேன்.
நான் தரம் ஐந்து படித்துக் கொண்டிருந்த காலம் அது... அது வரை சில தலைப்புக்களில் பத்து வசனங்கள் எழுதியது மெதுவாக கட்டுரை எழுதுதல் எனும் பரிணாமத்துக்குள் விழுந்தது. சுயசரிதைகள் அல்லது நான் விரும்பும் பெரியார் எனும் தலைப்புக்களில் கட்டுரை எழுதுவதென்றால் நீட்டி முழக்கிடுவேன். அன்று எங்கள் வகுப்பாசிரியர் வரவில்லை. எங்கள் குழப்படியும் சத்தமும் தாங்காது பக்கத்து வகுப்பில் கற்பித்துக் கொண்ட ஆசிரியர் கட்டுரை ஒன்று எழுதுமாறு பணித்தார். முதல் நாள் வாசித்த புத்தகம் ஞாபகத்துக்கு வர நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'நான் விரும்பும் கருணாநிதி'.
கேட்கப்பட்ட சொற்களுக்கு மேலதிகமாக பராசக்தி வசனங்கள் எல்லாம் கோர்வையாக்கப்பட்டு எழுதப்பட்ட அந்தக்கட்டுரைக்கு 90 புள்ளிகள் கிடைத்தன. ஆனால், அன்பாக அழைத்த அந்த ஆசிரியர் சில வரலாற்றுக் கதைகளும் சொல்லிவிட்டுப் போனார். முதல் நாள் உச்சத்தில் ஏறி நின்ற கலைஞரின் புகழ் மறு நாளே எனக்குள் மண் கவ்விக் கொண்டது. கட்டுரை, வசனம், கவிதை எனும் பரப்புக்களைத் தாண்டி வரலாறு, அரசியல் எனும் பரப்புக்களில் அப்பெயரை அலசிப் பார்த்தேன். முன்னையதில் கண்ணில் மட்டும் கறுத்தக்கண்ணாடி போட்டவர் பின்னையதில் முகம் முழுவதும் கறுப்பு பூசியிருந்தார்.
இன்று அந்த ஆசிரியரின் குடும்பமும் வந்ததாக சொல்கின்றார்கள். ஆனால், எனக்கு வரலாறு சொல்லித் தந்த ஆசிரியர் மட்டும் வரவில்லையாம்...!!!
கலைஞரே... மனம் விட்டுச் சொல்லுங்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகளின் தோற்றுவாய் உங்களுக்குத் தெரியாதா...? அல்லது, எரிவது எங்கள் ஊழ்வினை என்று விட்டு எட்டுச் செலவுக்கு பொருள் சேர்ப்பதுதான் உங்கள் கடமை என்றாகி விட்டதா...? எரிவது எங்கள் ஊழ்வினையாயின், நாங்கள் தலை நிமிர எண்ணியது தப்பா? நாம் தலை நிமிர்ந்தால் உங்கள் உச்சி குளிரும் என கவிதை வடிப்பீர்கள்...! ஆனால், எங்கள் தலை கொய்ய அத்தனையும் செய்து முடிப்பீர்கள்...!!!
கலைஞரே... நீங்கள் பேச்சாலும் மூச்சாலும் உச்சரித்த தமிழின் சொந்தங்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பணமும் பொருளும் தான் காக்கும் என்றால், பிச்சை போட பலர் அணிவகுத்துள்ளார்கள். அவர்களிடம் மண்டியிட்டு வாங்கிக் கொள்கின்றோம். பரவாயில்லை!!! ஆனால், கெஞ்சிக் கேட்கின்றோம்... எங்கள் அவலங்களின் மேல் ஏறி நின்று உங்கள் அரசியல் நாடகங்களை மேடையேற்றாதீர்கள்.
ஒன்றா.. இரண்டா... எத்தனை தடவைகள் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டீர்கள்? போதும் நிறுத்துங்கள்... பத்திரிகை விற்பவன் மணியோசை கேட்டு அகதி முகாமிலுள்ள இளங்குருத்து ஓடி வந்து வினவுகின்றது. "அண்ணே... கறுத்தக் கண்ணாடி ஐயா இன்று என்ன ஜோக் அடிச்சிருக்கிறார்..?" என்ன செய்ய... தன் அவலம் மறந்து சிரிப்பதற்கு உங்கள் செய்தியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு...
என் பிள்ளைக்கும், மாணவனுக்கும் சொல்லிக் கொடுக்க அந்த ஆசிரியர் சொன்னவைகளுடன் இன்னும் பல என்னிடம் இருக்கின்றன. நாளை என் பிள்ளை எழுதக்கூடாது "நான் விரும்பும் பெரியார் கருணாநிதி" என...