கொதித்துக் கொண்டிருந்தது புகையிரத தண்டவாளம்...
அருகில் துடித்துக் கொண்டிருந்த தலையில்
வளர்ந்திருந்த சிகைதான்
அடையாளம் காட்டியது பெண்ணென்று...
ஐஞ்சு மீற்றர் இருக்கலாம்
எஞ்சிய உடல் குருதி வெள்ளத்தில்...
காதல் தோல்வி
எப்போதும் போலவே முந்திக்கொண்ட சந்தேகம்...
குடும்ப வறுமை...
தீராத நோய்...
பரீட்சையில் தோல்வி...
வாழ்க்கையில் விரக்தி...
ஊர் கூடிக் காரணம் கற்பித்தது.
“படிச்சவள் செய்யிற வேலையா இது...?”
ஆதங்கங்களும் எரிச்சல்களும்
செத்துப்போனவளை விசரி என்று சபித்தன.
பொலீஸ் வந்தாயிற்று...
மஞ்சள் கோடும் கீறியாச்சு...
நீதிபதி வரவுக்காய்
தலையும் முண்டமும் சேராமல் காத்திருந்தன.
கேரளா நதியில் தேனிலவு கொண்டாடும்
அவள் காதலனுக்கு மட்டும் தெரிந்திருந்தது
செத்துப் போனது ஓருயிர் அல்ல... ஈருயிர்!!!