சேது, நந்தா, பிதாமகன்... இவ்வரிசையில் பாலாவின் மற்றுமொரு படைப்பு நான் கடவுள். முன்னைய படங்களின் காட்சி நகர்த்தலும், அவற்றில் பாலா வலியுறுத்திய விடயங்களும் படம்பார்க்க முதலே நான் கடவுள் தொடர்பான படத்தினை மனதில் தீட்டிவிட்டன. மனித உறவு நிலைகளை கேள்விக்குட்படுத்தி, மனித மனங்களில் மிருக விம்பங்களை தெறிக்கவைத்து அதனூடு பாலா சொல்கின்ற செய்திகள் மனதுக்கு சங்கடங்களைத்தான் ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் காட்சிகள் நிஜங்களாயிருப்பினும் மனது ஏற்க மறுக்கின்ற கொடூரங்கள் நான் கடவுள் தொடர்பான திருப்தியையோ மகிழ்வையோ என்னுள் ஏற்படுத்த தவறிவிட்டது.நாளும் காதை வந்தடைகின்ற செய்திகளின் கொடுமைகள் வார்த்தைகளுக்குள் அடங்காது. நண்பர்களுடன் கழியும் பொழுதுகள், சிலவேளைகளில் ஆலயதரிசனம் இவைகள்தான் மனதினை சாந்தம் கொள்ள வைக்கின்றன. அன்றும் நண்பர்களின் திட்டத்துக்கிணங்க நான் கடவுள் பார்க்க போகுமுன், பாலாவின் சுயரூபம் புரிந்து மனதுக்குள் ஒன்றுக்கு பலதடவை போகவேண்டுமா எனக்கேட்டும் ஈற்றில் தோற்றுத்தான் போனேன்.
பலர் பேசிக்கொள்கின்றார்கள் - எழுதுகின்றார்கள். வித்தியாசமான படம், தமிழ் சினிமாவின் திருப்பம் என... மனம் திறந்த பாராட்டுக்கள் வேறு. நந்தாவில் தாயின் அன்புக்காக ஏங்கி தாயினாலே நஞ்சூட்டிக் கொல்லப்படும் மகன், இங்கே பிள்ளைப்பாசம் வேண்டி வரும் தாயின் அன்பை தூக்கியெறிந்துவிட்டு கடவுளின் பெயரால் கொலைகளையும் புரிகின்றான். சட்டம் கூட அவனுக்கு கட்டுப்படுகின்றது.
படம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். மறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண் தெரியாத ஒருத்தியாக பூஜா... இரு துருவங்களும் இணைகின்ற இடங்களிலும் மனது ஏனோ திருப்தி கொள்ள மறுக்கின்றது. உடல் நலம் குன்றிய உறவுகளில் சிலர் நகைச்சுவைப்பேச்சினாலும், கலகலப்பினாலும் மனதைவிட்டு நீங்க மறுக்கின்ற போதிலும், அவர்களின் உடல் குறைகளினை வெளிச்சமிட்ட கமரா ஏனோ கூலிக்கு மேலாக வேலை செய்த உணர்வு எழுகின்றது.ஆர்யா, பூஜா நடிப்பினை குறை கூறவில்லை. தங்களுக்குரிய பாத்திரங்களில் ருத்ரனாகவும், பிறவிக்குருடியாகவும் வாழ்ந்திருக்கின்றார்கள். இளையராஜா மீண்டும் தானொரு இசையின் ராஜா என்பதை நீரூபித்திருக்கின்றார். பாடல்களும் சூப்பர்... ஆனால், தேடிச்சென்ற "மாதா உன் கோயிலில்..." பாடல் படத்தில் இல்லாதது ரொம்ப ஏமாற்றம்.

ருத்ரன் புரிந்த கொலைக்கு சட்டம் தலை சாய்ப்பதும், நீதிமன்றத்தில் சட்டத்துக்கு வந்த சோதனைகளும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகள். இப்படம் உடல்நலம் குன்றியவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுகின்றது என வாதிடுபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றிய உறவுகளுக்கு இப்படம் சொன்ன விமோசனம் என்ன? பிறப்பிலேயே நலிந்தவர்களாக பிறவி எடுத்து முதலாளித்துவங்களின் கிடுக்குப்பிடிக்குள் நசிந்து கொண்டிருந்தவர்கள் ஈற்றில் மலையை அசைக்கும் உரம் மிகுந்தவர்களாய் எழுந்து நின்றிருந்தால் இப்படம் சொல்லும் செய்தி கனதியானது. பூஜா கிறிஸ்தவ பெண்துறவியை சந்தித்த போது காட்சி நகர்த்தலில் நாம் வேண்டி நிற்கின்ற மாற்றம் பொய்த்துப்போய்விட மானிட நாய்களின் தாக்குதலுக்கு அவள் ஆளாகுவது கொடுமையிலும் கொடுமை.

உடல் நலம் குன்றியவர்களுக்கு நன்றியை தெரிவித்ததன் பின்னர் ஆரம்பித்து ஓடுகின்ற படத்தின் காட்சிகள் ஈற்றில் இவ்வுலகத்தில் துன்பத்தினால் அல்லற்படுகின்றவனுக்கு கிடைக்கின்ற வரம் மரணம் தான் என்று முடிவுக்கு வரும்போது - அம்மரணத்தையும் கடவுள்தான் அளிக்கின்றார் எனும் போது தியேட்டரில் எழும்பி நின்று "போடா..." என்று திட்டத் தோன்றுகின்றது. பிறப்பிலே பார்வையிழந்து, கிடைத்த குரல் வளத்தால் பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, கயவர்களின் கொடூரத்துக்கு ஆளாகி, ஈற்றிலே "காப்பாற்றுங்கோ சாமி..." என கடவுளை வேண்டிச்செல்பவள் கழுத்தினால் குருதி கொப்பளிக்க இறந்து கிடக்கின்றாள். இதற்குப் பெயர்தான் கருணைக்கொலையா...?


