Search This Blog

Monday, August 30, 2010

நிலாக்காதல் - 05

பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்,
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்,
பதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை இங்கேயும்,
பதிவர் கன்கொனினால் எழுதப்பட்ட நான்காம் பாகத்தை இங்கேயும் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....

ஒலித்த அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான் ஹரிஷ்... மறுமுனையில் அவன் அம்மா!!!
"ஹலோ.... தம்பி ஹரிஷ்..."
அம்மாவின் குரலில் பதற்றம் தொற்றியிருந்தது தெரிந்தது. ஆனாலும், அந்த நேரம் பார்த்து தெரியாத இலக்கத்திலிருந்து கோலொன்று வந்து வெயிற் பண்ண, அது அவளாக இருக்க வேண்டுமென அவன் மனம் காரணமின்றி அங்கலாய்த்தது.

"அம்மா... கொஞ்சம் இரணை. இன்னொரு கோல்..." அவன் சொல்லி முடிப்பதற்கிடையில்,
"டேய்... சந்தோஷைக் கொண்டு போயிட்டாங்களடா...!!! நீ எங்க நிற்கி..."
"என்ன...????"
இவ்வளவு சம்பவங்களும் முப்பது நொடிகளுக்குள் நடந்தேற, ஹரிஷின் அலைபேசியும் அணைந்து கொண்டது புதிய இலக்கத்துடன் தொடர்புறாமலே...

"அடச்சீ... நான் எப்படி மாறிப்போனேன்? வெளியில் போவதென்றால் ஒன்றுக்குப் பத்து தடவை எல்லாம் சரி பார்த்து போகின்ற எனக்கு என்ன நடந்தது? எப்போதும் ஃபுல் சார்ஜ்ஜில் இருக்கின்ற என் அலைபேசி இன்று மட்டும் ஏன் வெறுமையாகி கிடக்கின்றது? எல்லாவற்றிற்க்கும் மேலாக ஏன் இங்கு வந்தேன்???"

"அம்மா சொன்ன செய்தி? சந்தோஷைக் கொண்டு போனாங்களா? அல்லது கொன்றிட்டாங்களா?? குழப்பமாக இருக்கு!!!"

"லாவண்யா, உன்னால் தான்... எல்லாமே உன்னால் தான்!!!"

நேற்று நடந்த அச்சம்பவம் ஹரிஷை வெகுவாகப் பாதித்திருந்தது; சந்தோஷையும் கூடத்தான்... இருபது வருட நட்பு இருபது நிமிடத்தில் உடைந்து சுக்குநூறாகியது. துரோகமா? அல்லது தோல்வியா? இல்லை குற்றவுணர்ச்சியா? எதுவென்று பிடிபடாத ஒன்று ஹரீஷின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

நேற்று நடந்த அச்சம்பவம்...

★ ★ ★


சந்தோஷின் வீட்டில் ஊரே கூடி நின்றது. அனைவரினதும் வாழ்த்து மழையில் சந்தோஷ் நனைந்து கொண்டிருந்தான். இவன் துன்பங்களுக்கு எல்லாம் தோள் கொடுத்து தாங்கிய உற்ற நண்பன் ஹரிஷ்... இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் நிற்பான் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான தேசிய விருதிற்கான தங்கப்பதக்கம் சந்தோஷின் கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

"ஹரிஷ், எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கடா... ஆனாலும், அன்றைக்கு அவங்கள் அந்த செய்தியைப் பார்த்திட்டு என்னைச் சுடத் திரிஞ்ச போதெல்லாம் காப்பாற்றினது நீ தானே..." கண்களில் நீர் கசிய நன்றிப்பெருக்குடன் ஹரிஷைத் தழுவினான் சந்தோஷ்.

சட்டென தன்னை விடுவித்து, "ம்ம்ம்..." என்று ஹரிஷ் உதித்த வெற்று வார்த்தை சந்தோஷின் சந்தோசத்தைப் பறிக்க போதுமாயிருந்தது.

"அடேய்... உனக்கு என்னடா நடந்தது? ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?  சொல்லடா..." சந்தோஷின் கெஞ்சலுக்கு,

"சந்தோஷ், என்னை விட்டிடு. மனசு சரியில்லை"

"அதுதான் ஏனென்று கேட்கிறேன்..."

"இப்ப சொல்ல ஏலாது..!"

ஹரிஷின் விடாப்பிடி சந்தோஷிற்கு தெரியும். அவன் பிடித்த முயலுக்கு எப்போதும் மூன்று கால்களும் நான்கு காதுகளும் தான். இப்ப ஏலாது என்று சொன்னால் என்ன விலை கொடுத்தாலும் முடியாது. இறுதியாக கேட்போம் என்று விட்டுவிட்டான்.




ஊர் கூடியிருந்த வீடு சகஜ நிலைக்கு திரும்பும் நேரம் ஹரிஷ் தானாகவே சந்தோஷைத் தேடி வந்தான்.

"சொல்லு மச்சான்..." - இது சந்தோஷ்.

பதில் பேரிடியாய் இறங்கியது "மச்சான்???? இந்த உறவெல்லாம் நேற்று வரைக்கும் தான்!!!"

"ஹரிஷ்ஷ்ஷ்ஷ்... என்னடா? என்ன நடந்தது உனக்கு?"

"என்ன நடக்கவில்லை? நம்பியிருக்க ஏன் இப்படிச் செய்தாய்??"

"....???" பேச வார்த்தையின்றி, அது எப்படி என கேட்டுவைத்தது சந்தோஷின் முக பாவனை.

"இன்றைக்கு அவள் உனக்கு மெசேஜ் அனுப்பினவள் தானே..." ஹரிஷின் கண்கள் சிவந்து கோபக்கனல் வீசியது.

"எவளடா..?" கேள்வியாய் வந்த சந்தோஷின் பதிலில் இப்போதும் அப்பாவித்தனம் தான் விஞ்சியிருந்தது.

"அவள்... லாவண்யாதான்!"

"ஓமடா... வாழ்த்தி அனுப்பியிருந்தாள். அதுக்கென்ன??"

"அதுக்கு ஒன்றும் அர்த்தமில்லையென்றால் என்னிடம் ஏன் மறைத்தாய்?"

"................."

"அடேய்... சந்தோஷ்ஷ்ஷ்!!! " உரக்க கத்தினான் கொலைவெறியோடு...

பின்னர் சாந்தமாகியவன் போல,

"சந்தோஷ்... எனக்கு எல்லாம் தெரியுமடா...!!! அன்றைக்கு லண்டனிலிருந்து உனக்கு அழைப்பெடுக்கிறாள்... இன்றைக்கு மெசேஜ் போடுகிறாள்... என்ன நடக்குது இங்கே???"

"ஹரிஷ், இது நீயாடா? ஏன் இப்படி ஆனாய்?? சந்தேகம்... அதுவும் என் மேலே...!!!"

"அதுதான்டா... உன் மேலே தான்!!! அவள் லண்டனுக்குப் படிக்கப் போயிட்டாள் என்று அவளின்ட அம்மா உன்னுடைய அம்மாவிடம் சொல்லி, உன்னுடைய அம்மா உனக்கு சொன்னா என்று நீ சுத்தி வளைச்சுப் புதிர் போட்ட போதே நான் அலேர்ட்டாகி இருக்க வேணும். இப்ப புரியுதடா..."

"ஹரிஷ்... போதும் இத்துடன் நிறுத்திக் கொள்...!!!"

இதன் தொடர்ச்சியாய், ஹரிஷின் கரம் சந்தோஷிற்கு எதிராக நீண்டதும், பதிலிற்கு சந்தோஷ் தடி தூக்கியதும்.... இருபது வருடமாய் ஒன்றாய் நடந்த இரு சோடிக் கால்கள் எதிரெதிராய் நடக்கத் தொடங்கின!!! அவர்கள் நிரந்தரமாகவே பிரிந்து போயினர்.

★ ★ ★

அசம்பாவிதம் ஒன்றில் தான் மாட்டியதாக இப்போது ஹரிஷ் உணர்ந்தான். எதுவும் செய்ய முடியவில்லை. தனது கோமாளித்தனத்தையும், விமான நிலையத்துக்கு தான் வர எடுத்த முட்டாள்தன முடிவையும் எண்ணி நொந்தபடி வெற்று வானத்தை வெறித்த படி நின்றான். ஒரே தெரிவு... என்ன நடந்தாலும், நடந்திருந்தாலும் வீட்டுக்குப் போவதுதான் என எண்ணியவன்... வீடு நோக்கி வாகனத்தை இயக்கினான். வானொலியில் அந்தச் செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது.


சற்று முன்னர் கிடைத்த செய்தியொன்று...
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் இவர் சிறந்த இளம் பத்திரிகையாளராக...." செய்தி தொடர்ந்தது.

இதைத் தொடர லோஷனை அரங்கத்துக்கு அழைக்கின்றேன்.

You might also like