Search This Blog

Wednesday, May 19, 2010

யாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...


நட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.html


முதலாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பின் போதே, யாழ்தேவி காத்திரமான விமர்சனங்களுக்கு - குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கின்றது. இறுதியாக நண்பர் சந்ருவும் தன் ஆதங்கங்களை இங்கே யாழ்தேவி நோக்கி எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். நிர்வாகிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா...!!!

மே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்..! ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்..! ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா? நிர்வாகிகளே..! யாத்ரா வேலைப்பளு என நீங்கள் காரணம் சொன்னாலும், கல்லெறிபவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல... எனது முதுகையும் குறிபார்க்கத் தவறமாட்டார்கள்!!! தாங்காது என்னுடல்... ஆவன செய்யுங்கள்!!!

யாழ்தேவி நட்சத்திர வார இறுதியில், தினக்குரல் பத்திரிகையில் வெளிவரும் பதிவரின் ஆக்கம் நட்சத்திர வாரத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த என்னை என்ன செய்வது?

எண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள்!!! அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.

அது மட்டுமா? அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே... ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி..!!! ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். "அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?"

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவிக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். கடந்த இரு வாரங்களாக என்னை நட்சத்திரமாக்கி அழகு பார்த்த யாழ்தேவிக்கு நன்றிகள்.

Tuesday, May 18, 2010

யாருக்கும் சொல்லாத கதை


நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்
நான் தேடும் வதனம் இதுதானென
கனவு வந்து பரிசளித்தது...!!!
கற்பனைகளும் காத்திருப்புக்களும்
களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...
அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்
அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.
அறியாது புரியாது இருந்த
அர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று
ஓடிக் கொண்டிருக்கின்றது நாழிகை...!!!

Saturday, May 15, 2010

எழுதச் சொல்கிறாய்...!!!


எழுதச் சொல்கிறாய் நண்பா...!
மன்னித்துக் கொள்...!!!
எதையுமே நான் எழுதப் போவதில்லை.
எழுதுவதாலும் தொழுவதாலும்
எதுவுமே ஆகாதென்ற போது
வேண்டாம் இன்னொரு சாகடிப்பு...!

தோழனே...!
நாம் செய்ததெல்லாம் என்ன..?
உன் புத்தகத்தைப் பறித்து,
கரங்களுக்குள் கனரகங்களைப் புகுத்தி,
எல்லையில் உன் கருவி கனல் கக்கியதை
கணனியில் கொண்டாடி
கனவினில் நாடு கண்டோம்...!!!

சமைத்துக் கொண்டிருந்த உன் அம்மா
சரிந்து விழுந்த நாளொன்றில் அவள்
குருதியைப் படமெடுத்து
விற்றுக் கொண்டிருந்தோம்
யாராவது திரும்பிப் பார்க்கமாட்டார்களா என...!
உன் துயரத்தை கூவி விற்று
எம் உரிமையைக் கேட்டோம்.
யாருமே தரவில்லை...!!!

ஓடிக் கொண்டிருந்த வீடியோவில்,
காலிழந்த நீ...
குருதி கொப்பளிக்கும் அம்மா...
பசியையே பல நாளாய்
புசித்த உன் அக்கா மகள்...
சதைத்துண்டங்கள்...
மனித வேட்டையாடிய நாய்கள்...
இவைகளைக் காட்டியாவது
உன்னைக் காப்பாற்றலாம் எனும்
நம்பிக்கை அற்றுப் போன
ஓர் நாளில்
நீ சிறை வைக்கப்பட்டாய்...!!!!

Friday, May 14, 2010

Thursday, May 13, 2010

யாத்ரா 2010 - இணையத்தமிழ் மாநாடு


இலங்கைப்பதிவர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், கல்விமான்கள் அனைவருடனும் இணைந்து யாழ்தேவி நடாத்தும் "யாத்ரா" - முதலாவது இணையத்தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ம் திகதி (May 16 - 2010)ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவியின் இன்னொரு பயனுறு முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: யாத்ரா 2010

Wednesday, May 12, 2010

சாத்திரங்கள் பொய்ப்பதில்லை


சாத்திரங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்று எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்யத் தயார். அதேபோல், எந்தவொரு காரியத்துக்கும் குறிப்புடன் சாத்திரம் பார்க்க முன் வருகின்ற பெற்றோரை மீறிவிடமாட்டேன் என்பதும் சத்தியம்...!!! இரண்டுமே முரண்பாடுகள் தான். கைரேகையிலும், கிளி வாய் ஓலையிலும் என் எதிர்காலம் எப்படி அடகு வைக்கப்பட்டிருக்கும்? எனக்குள் எழுகின்ற வினா இது.

இந்தச் சாத்திர சம்பிராதயம் என் பத்து வயதில் அறிமுகமானது; அல்லது, அந்த வயதில் தான் அறியத் தொடங்கினேன். எங்கள் குடும்பம் அப்போது செம்பியன்பற்றில் இருந்தது. மாதத்திற்கு ஒரு தடவை கதிர்காமக் கந்தன் புகழ் பாடியவாறு குடுமி வைத்த சாத்திரி ஒருத்தர் வருவார். எங்கள் பிஞ்சுக் கரம் நிறைய விபூதி, கதிர்காமத்தின் பெயரால் கோயில் நூல்... இவற்றுடன் கை ரேகை பார்க்காமலே தண்ணியிலே கண்டம், படிப்பிலே சுட்டி என்று எதாவது அப்பாவுக்கு கோள் மூட்டிப் போட்டு போய் விடுவார். அதற்குப் பிறகு கடற்கரைக்குப் போகவும் முடியாது; மாலை நேர விளையாட்டு நேரமும் சுருங்கிவிடும். சாத்திரியை மனதுக்குள்ளாவது சபித்துக் கொள்ளுவோம் என்றால் அதுவும் தெய்வக்குற்றம் ஆகிடுமாம்.

அப்போதெல்லாம் எப்போதாவது இருந்து விட்டு எங்கேயாவது தட்டுப்படுகின்ற சாத்திரிகள் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்த காலமும் இருந்தது. விடுதலைப்புலிகளுக்கும் ரணில் தலைமையிலான அரசுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம் அது...!

கழுத்து நிறைய மாலை, கை நிறைந்த வளையல்கள், ஒரு ஓலைக் கட்டு, வெற்றிலைச்சாறு வழிகின்ற வாய், சிலருக்கு இடுப்பிலே ஒரு குழந்தை... இவைகள் தான் சாத்திரக்காரர்களின் அடையாளங்களாக இருந்தது. குஞ்சு குருமன்கள் கூட தொழில் தேர்ச்சியுடன் வந்தார்கள். “சாத்திரம் பார்க்கலையா...?” என்று ஆரம்பித்து, “உங்களுக்கு நல்ல காலம் காத்திருக்கிறது... ஒரு தரம் கேட்டுப்பாருங்கோ அம்மா/ஐயா... ” என்று நெஞ்சிலே பால் வார்ப்பார்கள். அல்லாது விடின், “தூரப்பயணம் காத்திருக்கு... உயிருக்கே ஆபத்து வரலாம்” என்று மரண பயம் காட்டி பீதியைக் கிளப்புவார்கள். இந்த வார்த்தை ஜாலத்துக்கு மயங்கி மயில்களை இழந்தவர்கள் பலருண்டு.

சிவனே என்று என்பாட்டுக்கு வீதியால் போன என்னை யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வம்புக்கிழுத்து சாத்திரம் பார்த்த ஒருத்தன்... ஈற்றில் அதுவரை கேட்டிராத வார்த்தைகளில் என்னை அர்ச்சித்து சபித்துப் போன கதை மறக்க முடியாதது.

ஏ9 பாதையால் வந்த இவர்கள் தங்களை சாத்திரக்காரர் என்று சொன்னாலும் - ஊர் நம்பினாலும், பக்கத்து வீட்டு பார்வதி ஆச்சிக்கு உவர்கள் றோவின்ர ஆட்கள்... அல்லது சிஐடிமார்.

நீங்கள் சாத்திரக்காரர்களின் தொல்லையை அனுபவிக்க வேண்டுமா? வார இறுதி நாட்களில் வெள்ளவத்தை பீச்சுக்குப் போய்ப் பாருங்கள். அதே வார்த்தை ஜால மாய வித்தை. ஒரு நற்செய்தியுடன் ஆரம்பிப்பார்கள் - அல்லது, உயிருக்கு உலை வைக்கும் செய்தியை காவி வருவார்கள்..! ஆரம்பக்கட்டணம் எப்போதும் ஐம்பது ரூபாய்தான். (நேற்று முன்தினம் ஏறின காஸ் விலைக்கு முந்தைய நிலவரப்படி.) எவ்வளவு நேரம் அவர்கள் திருப்பாவுக்கு நீங்கள் தலையாட்டி மத்தளம் வாசிக்கின்றீர்களோ... அந்தளவுக்கு நேர் விகிதமாய் பொக்கட்டும் காலியாகும். ஜனாதிபதி கூட கை மாறுவார்... ஆயிரம் ரூபாய் தாளைச் சொன்னேன்!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை... நண்பர்கள் இருவருடன் வெள்ளவத்தையில் கடற்காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். சாத்திரக்காரர்கள் அங்கே வழமையாக காதல் ஜோடிகளையே குறி வைப்பார்கள். ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் நோக்கில்... ஆனால், அன்று மாட்டுப்பட்டது நாங்கள் மூவரும்... வழமை போல கேட்காமலே முன் புராணம் பாடத் தொடங்கினாள் சாத்திரக்காரி ஒருத்தி. இப்படித்தான் தொடங்கினாள்... “இன்னும் இரண்டு வருடத்தில்.... அப்போது எனக்கு இருபத்திரெண்டு வயது ஆகும் போது...” நல்லதோ கெட்டதோ அவள் சொல்லி முடிக்கவில்லை. ஆனால், அன்பு நண்பர்கள் இருவரும் முடித்து வைத்தார்கள். அப்படி ஒரு ஏச்சு இது நாள் வரை அவள் வாங்கியிருப்பாளோ தெரியாது. எப்போதும் போல சாபங்களைத் தெளித்தவாறு போய் விட்டாள். என்னால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை.

★ ★ ★


வீட்டுக்கு வந்து மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தேன். மின்னஞ்சலொன்று காவி வந்த செய்தி இப்படி இருந்தது: “யாத்ரா நிகழ்வை முன்னிட்டு இளமைத்துடிப்புள்ள உங்கள் நட்சத்திர வாரம் யாழ்தேவியில் நீடிக்கப்பட்டுள்ளது.

சாத்திரங்கள் எப்போதும் பொய்ப்பதில்லை...

(சம்பவங்கள் கற்பனையானவை - நம்புங்கள்)

Sunday, May 9, 2010

தேசியப்பட்டியலில் சனத்?


இலங்கை கிரிக்கட் அணியிலும் தேசியப்பட்டியல் நியமனம் உள்ளதா என்று சிந்திக்க வைக்கின்றார் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரியா அவர்கள். இவர் பல சாதனைகளுக்கு உரித்தான முன்னாள் கிரிக்கட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறகென்ன... கடந்த ஐபிஎல் போட்டியில் 04 போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக பெற்றது 33 ஓட்டங்கள் மட்டுமே. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கிண்ண T20 போட்டிகளில் 03 போட்டிகளில் 14 ஓட்டங்களைப் பெற்றும் அணியில் அசையாத நந்தியாய் இடம்பிடித்துள்ளார்.

வாக்குப்போட்ட மக்கள் உங்கள் சேவைக்காக காத்திருக்கின்றனர். மைதானத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்... இலங்கை கிரிக்கட் ரசிகர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டும்.

தோற்றுப் போகின்றேன்

நீ...
உன் கரம் ஏந்தும் ரோஜா...
உன் குறும்பு...
சந்தித்த முதல் நாள்...
இவைகளை எழுதத் தொடங்கும் போது
பேனா மை தீர
என்னிடம் நானே தோற்றுப் போகின்றேன்.
உணர்ந்து கொண்டேன்...!!!
உன்னை வடிப்பதற்கு சொற்களுக்கேது வேலை
என் நெஞ்சில் நீ சிற்பமாய் வந்த பின்பு...!!!

Saturday, May 8, 2010

இராவணா - வரலாற்றுத் திரிபு


மணிரத்னம்... சினிமா உலகில் வியந்து நோக்கப்படும் இயக்குனர்களில் ஒருத்தர். காதல், தீவிரவாதத்தின் தாண்டவம் போன்றவற்றை தனது திரைப்படங்களினூடு மக்களின் மனங்களில் பதித்தவர். எப்போதும் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.

இவரின் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் இராவணா படத்தின் பாடல்கள்தான் இப்போது எங்கும் ஆக்கிரமித்து நிற்கின்றன. இப்படத்தில் விக்ரத்துடன் ஜோடி சேர்கின்றார் ஜஸ்வர்யா ராய். வைரமுத்துவின் வைர வரிகள், இரகுமானின் தெவிட்டாத இசை... இரண்டும் இணைந்து காதில் தேன் வார்க்கின்றன. இரகுமானை இசையுலகத்துக்கு தனது ரோஜா படத்தின் மூலம் அறிமுகம் செய்தவரும் மணிரத்னமே.

வெளிவந்த பாடல்களில் “காட்டுச் சிறுக்கி... காட்டுச் சிறுக்கி...”, “உசிரே போகுதே... உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” ஆகிய படல்கள் கேட்டதும் சிக்கெனப் பிடித்துக் கொண்டன. சங்கர் மகாதேவனுடன் இணைந்து அனுராதா பாடும் காட்டுச் சிறுக்கி என்று ஆரம்பிக்கும் பாடலில் வரும் வரிகளில், "பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி" தனிமையின் கனதியினை வடித்தெடுக்கின்றது வைரமுத்துவின் பேனா... கூடவே இசையும். “உசிரே போகுதே... உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே” எனும் பாடல் தினமும் காலை வேளையில் என் தேசிய கீதமானது. படத்துக்காகக் காத்திருக்கின்றேன்!!!

தளபதி படத்தின் மூலம் மகாபாரதக்கதையையும், ரோஜா படத்தின் மூலம் நள-தமயந்தி கதையையும் நினைவூட்டிய மணிரத்னம் இப்படத்தின் மூலம் இராமாயணத்தைப்பற்றி பேச விரும்புகின்றார் என ஊகிப்பது இலகு.

ஆனால், இராமாயணத்தில் அரக்கனாகவும், அசுரனாகவும், பெண் பித்துப் பிடித்தவனாகவும் சித்திரிக்கப்பட்ட தமிழ் மன்னனான இராவணன் உண்மையில் ஒரு கொடுங்கோலனா என்ற வினாவை இங்கு எழுப்ப முனைகின்றேன்.

வரலாற்றின் திரிபுகளால் - ஆரிய ஆதிக்கத்தின் விளைவால் இராமன் எனும் கதாபாத்திரத்துக்கு எதிர் மறையாக உருவகிக்கப்பட்டவன் தான் இராவணன். கம்பர் சொல்கின்ற வலிதற்ற - நடைமுறையில் ஓட்டைகள் மிகுந்த - கவித்துவ மயக்கத்தில் அடங்கிப்போன காரணங்களை எடுத்து அலசி ஆராய முற்படுங்கள். இராவணன் கொடுங்கோலனாக அன்றி, சிவபக்தனாக தோன்றுவான். இராமனைக் கடவுளாக்க கம்பன் கையாண்ட உத்தி இராவணனை அசுரனாக்கியது.

சூரியன் வானொலியின் நேற்றைய காற்று நிகழ்ச்சியில் இவ்விடயம் தொடர்பாக அன்றொருநாள் வரலாறுகள் அலசி ஆராயப்பட்டது ஞாபகத்துக்கு வருகின்றது. அப்போது சூரியனில் பணியாற்றிய கிருஷ்ணாவும் பிரதீப்பும் இந்நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினார்கள். ஆனால், அந்நிகழ்ச்சி தொடர்பாக எழுத்து வடிவங்களில் எதுவுமே என் தேடலுக்குள் அகப்படவில்லை.

மணிரத்னத்தின் இராவணனுக்காக காத்திருக்கின்றேன்... வரலாற்றுத்தவறுகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கையுடன்...!!!

கிளப்பப்படும் பீதிகளும் வதந்திகளும்

காலை பத்து மணி... சோம்பல் முறித்து நித்திரைப் பாயினால் எழும்பும் போதுதான் அந்த விடயம் உறைத்தது. நேற்றிரவு என் நண்பனுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒன்றை மறந்திருந்தேன்... அவசரமாக அவனுக்கு அழைப்பெடுத்தேன்.

துரதிர்ஸ்டம்... அவனுடைய கைத்தொலைபேசி அவனுடைய தம்பியின் உபயோகத்தில் இருந்தது. அவனிடம் வீட்டுத் தொலைபேசி எண் பெற்று முயற்சித்தேன். ம்கூம்.... அழைப்பு இணைப்புப் பெறவில்லை. தொலைபேசி அணைக்கப்பட்டிருப்பதாக மறுமுனையில் கீச்சிட்ட பெண் சொல்லிப் போனாள்.

வேறு வழியில்லை... அவன் தம்பி வீட்டுக்குப் போகும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால், நீண்ட நேரம் எடுக்கவில்லை. பதினொரு மணியளவில் நண்பனே அழைப்பெடுத்தான்.... வீட்டுத் தொலைபேசியிலிருந்து!!!

பேசி முடிக்கும் தறுவாயில் தான் சொன்னான். சில தொலைபேசி எண்களிடமிருந்து வருகின்ற அழைப்புக்களுக்கு பதிலளிக்க முற்பட்ட 27 பேர் மரணித்திட்டார்கள். அந்த அழைப்புக்கள் சிவப்பு நிறத்திலே வருகின்றன. வீட்டுத் தொலைபேசியில் அழைப்பு எண் காட்சிப்படுத்தப்படாமையினால் அதை அணைத்து வைத்திருந்தார்களாம்.

என்ன கொடுமை இது...! அப்போதுதான் அர்த்த சாமம் 6.30 இற்கு (விடுமுறை நாட்களில் காலை 6.30 எனக்கு அர்த்த சாமம் தான்) யாழ்ப்பாணத்திலிருந்து நண்பனொருத்தன் அழைப்பெடுத்து இது தொடர்பாக அறிவுறுத்தியது ஞாபகம் வந்தது. பாவம் அவன்...! நித்திரைத் தூக்கத்தில் என்ன உளறித்தொலைத்தேனோ தெரியாது... கேட்க வேண்டும்...!!! ஆனாலும், அக்கறைக்கு நன்றி நண்பா.

இந்த விடயம் தொடர்பாக இன்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்; அக்கறையாக வந்த குறுஞ்செய்திகளை நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டு மர்ம வெளிச்சம் போன்ற கதைதான் இதுவும்.

ஒரு தொலைபேசியிலிருந்து எடுக்கப்படும் அழைப்பின் மூலமோ அல்லது பெற்றுக்கொள்ளப்படும் அழைப்பின் மூலமோ பேசும் தொலைபேசியின் அதிர்வெண்களில் மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. அதுமட்டுமன்றி, தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்துவதன் மூலம் அதனூடு வைரஸினை உட்புகுத்தி மறுமுனையில் இருப்பவரை சாகடிக்கவும் முடியாது.

இந்த வதந்தியின் பிறப்பிடம் பாகிஸ்தான். 2007 ஆம் ஆண்டு இப்படியான வதந்தி ஒன்று அங்கே காட்டுத்தீ போல பரவியது. பின்னர், உடனடியாக ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகள் இப்படியான ஒரு தாக்குதலை தொலைபேசிகளினூடு நடாத்த முயற்சிப்பதாக வதந்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்நாட்டு அரசுகள் தங்கள் தொலைபேசி இணைப்பு வழங்குனர்களுடன் இணைந்து இந்தச்செய்திகளை மறுத்திருந்தனர்.

உயர்தர தொழில்நுட்ப உதவியுடன் தீவிரவாதிகள் அமெரிக்க மக்களை பழிவாங்கும் நோக்குடன் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவர்களை கொல்வதாக புனைகதை எழுத்தாளர் எழுதிய கதையொன்றின் அடிப்படையிலேயே இப்படியான வதந்திகளும் பீதிகளும் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆச்சரியம் என்னவெனில், தொலைபேசியினூடான வைரஸ் தாக்குதலின் மூலம் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதும் 27 பேர்... ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதும் 27 பேர்... இன்று இலங்கையில் கொல்லப்பட்டதும் 27 பேர்... அதில் ஒருத்தர் யாழ்ப்பாணம், இன்னொருத்தர் வெள்ளவத்தையாம்...!!!

Thursday, May 6, 2010

தமன்னா - பிடிச்சிருக்கு


நேற்று வரைக்கும் அவிச்ச இறால் நிறத்தழகி என்றிருந்த தமன்னாவை இன்று பிடித்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் எல்லோர் மனதையும் தீண்டிய விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸியையும் விஞ்சி நிற்கின்றாள் பையாவின் சாரு!!! இளசுகள் பலவற்றின் தூக்கக் கலைதலுக்குக் காரணமாய் நடை, நளினம், அசைவு என்று எல்லாவிதத்திலும் நிறைந்திருக்கின்றாள்...

பையா படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ என்று புளுகுவதற்கு அதில் எதுவுமில்லை. படத்தில் லொஜிக் தேடி பிழைபிடிப்பவர்களுக்கு தாராளமாக அது நிறைந்துள்ள ஒரு படம். கண்டதும் காதல், காதலுக்காய் அலைதல், வழமையான தமிழ்ச்சினிமா தடாலடிச் சண்டைகள், இறுதியில் இணைதல்... இதுதான் பையா படமென்றால்... இல்லை! அதற்கும் மேலாக படம் முழுவதும் ஓடித் திரியும் ஒரு காரின் பயணம்... அந்தக்காரின் பயணத்தினூடு இயக்குனர் லிங்குசாமி பேசுகின்ற காதலும், அதன் வலிகளும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றது. கூடவே பாடல்களும்...!!!

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தந்த பையா பாடல்கள் இப்போது போலவே எப்போதும் காதல்க்கீதம் இசைக்கத்தான் போகின்றன.






கார்த்தி... இரசிக்க வைக்கின்றார். இடைக்கிடை அண்ணன் சூர்யாவையும் நினைவுபடுத்த மறக்கவில்லை.

அது சரி...! எப்போதோ பார்த்த பையா பற்றி இப்போது என்ன பேச்சு என்றுதானே கேட்கின்றீர்கள். நண்பன் ஒருத்தன் சொன்னான் - தமன்னாவுக்காக சுறா பார்க்கலாமாம். பையாவில் வந்த தமன்னா பிடித்திருக்கின்றது என்பதற்காக சுறா பார்க்கப் போவேன் என்பது அந்த விஜய் பக்தனின் எதிர்பார்ப்பு... கூடவே, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல சிந்தனையும் தான். ஆனால், சொந்தச்செலவில் சூனியம் வைக்கும் எண்ணம் எனக்கில்லை!!!

Wednesday, May 5, 2010

கோழிப்புக்கை - ஒரு ஒப்புதல் வாக்குமூலம்


தலைப்பை கோழிப்பொங்கல் என்று இட வேண்டுமா என எண்ணுகின்றேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரைக்கும் தைப்பொங்கலுக்கு காய்ச்சிப் படைப்பது எங்களுக்கு புக்கையாகத்தான் இருந்தது. ஆனால், கொழும்புக்குள் நகர்ந்த போது - வேறொரு மொழியை உள்வாங்கிய போது உச்சரிக்கப்படக்கூடாத ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்ட தெரிந்த முதல் பதம் இந்த புக்கை தான். வேற்று மொழி பழகிய ஆரம்ப காலங்களில், தெரியாத்தனமாக வாய்க்குள் தட்டுத்தடுமாறி வரும் போதெல்லாம் சகோதர மொழி நண்பனுக்குப் புரியாமல் விழுங்குவதில் உள்ள சங்கடம்... அனுபவித்துப் பார்க்க வேண்டும்.

”அடேய்... வடமராட்சியில் கோழிப்புக்கை என்று ஒரு சாப்பாடு செய்வாங்களாமே. உனக்குத் தெரியுமா...?” பல்கலைக்கழகத்தில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன் கேட்ட நண்பனுக்கு என் பதில் இப்படித்தான் இருந்தது. “தெரியுமாவா...? வீட்டிலே பானை பானையாய்க் காய்ச்சிக் கொட்டுவாங்கள்...! ஏ9 பாதை திறக்கும் போது கட்டாயம் வா... செய்து தரலாம்.”

கோழிப்புக்கையின் ருசி மட்டுமல்ல... அதன் நிறம் கூட என்னவென்று அறியாத நான் இப்படிச் சொல்லவும் ஒரு காரணம் இருந்தது. அது... எப்போது இந்தப் பாதை திறந்து, எப்போது இவர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள் என்ற அதீத நம்பிக்கைதான். குறைப்படாதீர்கள்...! அந்த நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல... அப்போது எல்லோருக்கும் தானே இருந்தது.

வடமராட்சியின் சில ஊர்கள் எப்போதும் சில உணவுப்பண்டங்களின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு, பருத்தித்துறை வடை, நாகர்கோவில் நாவற்பழம், வடமராட்சி கிழக்கின் கரைவலை மீன்.... இலண்டன் சந்தைகளிலும் இவற்றுக்கு கிராக்கி அதிகமாம். அங்குள்ள வல்வெட்டித்துறை நண்பன் புளுகியிருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன்.

நான்கு வருடங்களுக்கு முதல் கேட்டதை ஞாபகம் வைத்திருந்தவன் அன்றைக்கு அழைப்பெடுத்தான்.
“மச்சான் நாங்களும் யாழ்ப்பாணத்தில் தான் நிற்கிறோம். கொழும்பிலேயிருந்தும் கொஞ்சம் இறக்குமதியாகியிருக்கிறாங்கள்... நாளைக்கு வடமராட்சி வாற ஐடியா. மணற்காட்டுக் கடல்... பிறகு உன் வீட்டிலே கோழிப்புக்கை மத்தியானச் சாப்பாடு...”

கிழிஞ்சுது போ... வேறு வழி தெரியவில்லை... தொலைபேசி ஆமென்று பதில் சொல்லி அணைவதைத்தவிர!!! பத்து செக்கன் உரையாடலின் முடிவில் கைத்தொலைபேசி நூறு டிகிறியில் சுட்டது.

அம்மாவைப் பார்த்தேன்... ம்கூம்... என் மானப் பிரச்சினையின் வீரியத்தை விளங்கப்படுத்தி, முடியாவிட்டால் சக்கரைப்பொங்கலாவது காய்ச்சுங்கோ என்றேன்.

★ ★ ★

வல்லிபுரக்கோவிலின் சுற்றாடலில் கிளைவிட்டு நின்ற பனைமரத்தை தரிசித்த வண்ணம் மணற்காட்டுக் கடலை அடைந்தாயிற்று.


மணற்காடு என்றதும் எப்போதும் பதினாறு வயது இளங்குருத்தொன்றுதான் என் ஞாபகத்திரைகளில் தோன்றி மறைவான். 1993 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். கப்பல் வடிவிலான ஊர்தியில் பவனி வந்த அவனுக்கு காத்திருந்து பூக்கள் சொரிந்ததும் - அந்தப் பூ வாங்கிப் போட்டவள் இன்னொரு நாள் அதே மாதிரிக்கப்பலில் பவனி வந்ததும் மனது மறக்காத வரலாறுகள்.

வெயில் சுட்டெரித்தது... ஆனாலும், கடல் நீர் இதமாகத் தான் இருந்தது. மூன்று மணித்தியாலங்கள்.... அருமையான பொழுது. கடலுக்குள் நாங்கள் தாண்டு போனாலும் தூக்குவதற்கென்று துணையொன்றைக் கரையில் இருத்தி விட்டு கும்மாளம் நடந்தது. பாவம்.... எங்கள் போட்டோப் பிரியன்.

அந்த மண் மலை, சவுக்கம் தோப்பு, தூர்ந்து போன மணலில் இருந்து வெளிப்படும் தேவாலயம், எங்களுக்காய் உயிர் துறந்த நண்டு, ஒரு துண்டு எச்சமுமின்றி துடைத்து வழித்த இடியப்பமும் சொதியும்.... என்றைக்கும் மறக்காது!!!


இதிலே இன்னொன்றையும் மறைக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும். அன்றைக்குத்தான் நானும் முதன் முதலாய் மணற்காட்டுக்கடலில் கால் நனைத்தேன். ஆனாலும், நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த வழிகாட்டியாய் நடித்ததை எண்ணி இப்பவும் பிரமிக்கின்றேன்.

அடுத்ததாய் மதிய உணவு... அது தான் கோழிப்புக்கை. என்ன நடந்ததென்று நான் சொல்வது சுயதம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். ஆனாலும், கூடவே ஒரு மூடை சீனியும் வாங்கி வைத்திருக்கலாம் என நண்பர்கள் உணர்ந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுடன் கூட இருந்து உண்டவன் தானே நானும்.

ஊர் சுற்றிப்பார்க்கவென வந்தவர்கள் கோழிப்புக்கை சாப்பிட்ட மறுநாள் ஓய்வெடுத்து வீட்டில் தங்கியிருந்தார்களாம்... நல்லது தானே!!! ம்ம்ம்.... யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிற்கின்ற மின்சாரம் போல தண்ணிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. தப்பிக் கொண்டார்கள்.

கடந்தது கடந்து போகட்டும்...!!! எந்தளவுகளில் தூள், கடுகு, மிளகு, பச்சை மிளகாய் இடுவதென இப்போது அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.... இரண்டாவது தடவையாக இன்னொரு தரம் சமைப்பதற்கு தயாராக இருக்கிறாளாம். ஆகவே, அடுத்த தடவை வரும் போதும் மறக்காமல் வந்திடுங்கள்...!!!

Monday, May 3, 2010

எனது நகரம்


அர்த்த சாமமொன்றில் இந்நகருக்கு
விடை கொடுத்து ஓடினோம்.
கை அசைக்கவில்லை...
கட்டிப்பிடித்து முத்தமிடவும் இல்லை....
எந்தச் சம்பிரதாயங்களுமற்று
அந்தரத்தில் தவிக்க விட்டுப் போனோம்..!!!
நகரை மட்டுமல்ல...
எட்டடி எட்டி வைக்க முடியாத பாட்டியும்,
இரத்தம் சொட்டச் சொட்ட
ஒரு துளி நீருக்காய் கூக்கிரலிட்ட அயலவனும்,
காரிருளில் வழிகாட்டிப் போன தோழன்
விழி மூடியதும் - அவனைக்
கட்டியிருந்த வேட்டியில் அள்ளி எடுத்து
பாடை கட்டி விட்டு...
ஓடிக் கொண்டிருந்தோம்...!!!

கசந்தது... வாழ்க்கை கசத்தது!!!
காலில் ஒட்டி வந்த மண்ணும்
பாதித்தூரத்துடன் பயணத்தை நிறுத்தியது.
என் வீடு...
என் வயல்...
என் கடல்...
எதுவுமே எனக்காக இல்லாத போது
என்னைத் தடுப்பதற்கு ஏது...?
நகரின் எல்லையில்
அன்புக் காதலியின் பெயரை
என்னுடன் செதுக்கி வைத்த மரத்தை தேடினேன்.
விழுப்புண் தாங்கி
எல்லைக்குக் காவலாய்க் கிடந்தது...
புரியாத மொழியில் வாசகங்கள் தாங்கி...!!!

இன்று எந்நகரம் புன்னகைக்கின்றது.
நெஞ்சுக்கு நேரே குறி பார்த்த எந்திரங்கள்
மண் நோக்கி குனிந்து கிடக்கின்றன.
‘நிறுத்துக’ என்ற கட்டளையும்,
தொட்டுத் தடவி தேடி அலசியபின்
‘ஒத்துழைப்புக்கு நன்றி’ சொன்ன
பதாகைகளும் வெயிலில் காய்கின்றன.
கஸ்டப்பட்டு உச்சரித்து வணக்கம் சொல்வதும்...
புன்னகை சிந்தி வழியனுப்புவதும்...
சங்கடங்கள் தான்.
ஆனாலும்...
பழக்கப்பட்டுக் கொள்கின்றோம் வேறு வழியின்றி.

எந்நகரம்
என்னை அகதியாகவும்
சகோதரனை சுற்றுலாப்பயணியாகவும்
வரவேற்றுக் கொண்டிருக்கின்றது.

Sunday, May 2, 2010

யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக...


சொந்தத் தேவையின் நிமித்தம் திருகோணமலை சென்றதனால் இரு நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு தான் மின்னஞ்சல் பெட்டியினை திறந்தேன்.

அதிசயம்...!!! இலங்கையிலிருந்து செயற்படும் திரட்டியான யாழ்தேவியிடமிருந்து ஒரு மின்னஞ்சல்.... இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு என்னை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக அறிவித்துள்ளார்கள் - போதிய கால முன்னறிவித்தலுடன்.

அழைப்பைத் தட்டிக்கழிக்க முடியுமா...? அன்புடன் - நன்றியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

கடந்த சில தினங்களாக சோம்பலிடமும், வீட்டுக்காய்ச்சல் போன்ற சில இதர எண்ணங்களிடமும் தொலைத்து விட்ட என் நேரத்தை இவ்வாரம் முழுவதும் பதிவுலகத்துடன் கழிக்க விரும்புகின்றேன்.

சந்தர்ப்பத்தை தந்த யாழ்தேவி திரட்டி நிர்வாகத்தினருக்கு நன்றிகள்!!!

விஜய் படம் - நூறு புள்ளிகள்


பரீட்சையில் கேட்கப்பட்டது...
உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்
வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்
அது என்ன..?
விடைகளுக்கான தெரிவுகளில்
முதலாவது மலசலகூடம்...
இரண்டாவது விஜய் படம்...
விடை அளித்தவர்கள் யாவரும்
பெற்றனர் நூறு புள்ளிகள்!!!
இரு தெரிவுகளும் பொருத்தமாம்!!

படித்ததில் ரசித்தது

You might also like