Search This Blog

Monday, December 20, 2010

2010 - 140 எழுத்துக்களில்


2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை!!!


2010 இன் முதலாவது ருவீட்டு...
@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


வழமையான ஒரு விடியல் ஆயினும் புதுவருடத்துக்கான எதிர்பார்ப்புக்கள் இல்லாமலும் இல்லை... எல்லோருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
ஜனவரி 01, 2010. புதியதொரு வருடத்தின் முதல் நாள். வழமையான விடியல்....



இருந்து பாருங்கள்... 2010 இன் கடைசியில் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமை கரம் மாறியிருக்கும். #ருவீட்டர் #கூகிள்
கூகிள் ரசிகனாக எனது அதீத நம்பிக்கை. ஆனால், 2010 இல் கூகிள் தன் அசையா இருப்பைத் தக்க வைக்க Facebook உடன் போராட வேண்டிய நிலை.



ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த வேளையில் - நல்லூர்க்கந்தனின் காலடியில் காணிக்கைகள் செலுத்தப்பட்ட படங்கள் இணையத்தில் வந்திருந்தன...
எமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன் #நாட்டு_நடப்பு
இன்று? நாட்டு நடப்பு எப்படித்தான் அவசர கதியில் மாறிப்போகின்றது.


பகிஸ்கரிப்பு என்பது நாங்கள் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான நியாயமாகிவிடக்கூடாது. #நாட்டு_நடப்பு
ஜனவரி 04, 2010. ஜனாதிபதித்தேர்தலை முன்னிறுத்தி...


மொழி நடையும், கருத்தும் பிடித்திருந்தது.
RT: @cowboymathu: @thinkynt கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள், வீடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு #கவிதை



ஜனவரி 26 நள்ளிரவு தாண்டி விழித்திருந்த வேளை... ஏதோ நம்பிக்கையில் காத்திருந்திருக்கிறேன்... ஜனாதிபதித் தேர்தல் 2010 முடிவுகள் சிலவற்றின் இறுதியில் இப்படி ருவீட்டி விட்டு நித்திரைக்குப் போயிருந்தேன்.
இனி நான் விழித்திருக்கத் தயாரில்லை. வளமான எதிர்கால நாளைய நாளில் சந்திப்போம். Good night

அகராதியில் இல்லாத "சிறுபான்மை" வாக்களித்தபின் இலங்கைப் படத்தில் இருக்கிறது.




மூன்று வருடத்துக்குப் பின்னர் யாழ். சென்று வந்தேன்... களைப்பு!!! மகிழ்ச்சி!!!


ஒரு நாள் போட்டியில் ஆகக்கூடிய ஓட்டங்களை சச்சின் பெற்ற மறுகணம்
Congratz Sachin......


நித்தியின் சீடர்களை விட, சாருவின் சீடர்களின் கருத்துக்களுக்காக ஏன் நான் காத்துக்கிடக்கின்றேன்...
ஏன் நான் காத்திருந்தேன்?


காதல் காதல் காதல்
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது....

Monday, August 30, 2010

நிலாக்காதல் - 05

பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.
பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை இங்கேயும்,
பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை இங்கேயும்,
பதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை இங்கேயும்,
பதிவர் கன்கொனினால் எழுதப்பட்ட நான்காம் பாகத்தை இங்கேயும் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....

ஒலித்த அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தான் ஹரிஷ்... மறுமுனையில் அவன் அம்மா!!!
"ஹலோ.... தம்பி ஹரிஷ்..."
அம்மாவின் குரலில் பதற்றம் தொற்றியிருந்தது தெரிந்தது. ஆனாலும், அந்த நேரம் பார்த்து தெரியாத இலக்கத்திலிருந்து கோலொன்று வந்து வெயிற் பண்ண, அது அவளாக இருக்க வேண்டுமென அவன் மனம் காரணமின்றி அங்கலாய்த்தது.

"அம்மா... கொஞ்சம் இரணை. இன்னொரு கோல்..." அவன் சொல்லி முடிப்பதற்கிடையில்,
"டேய்... சந்தோஷைக் கொண்டு போயிட்டாங்களடா...!!! நீ எங்க நிற்கி..."
"என்ன...????"
இவ்வளவு சம்பவங்களும் முப்பது நொடிகளுக்குள் நடந்தேற, ஹரிஷின் அலைபேசியும் அணைந்து கொண்டது புதிய இலக்கத்துடன் தொடர்புறாமலே...

"அடச்சீ... நான் எப்படி மாறிப்போனேன்? வெளியில் போவதென்றால் ஒன்றுக்குப் பத்து தடவை எல்லாம் சரி பார்த்து போகின்ற எனக்கு என்ன நடந்தது? எப்போதும் ஃபுல் சார்ஜ்ஜில் இருக்கின்ற என் அலைபேசி இன்று மட்டும் ஏன் வெறுமையாகி கிடக்கின்றது? எல்லாவற்றிற்க்கும் மேலாக ஏன் இங்கு வந்தேன்???"

"அம்மா சொன்ன செய்தி? சந்தோஷைக் கொண்டு போனாங்களா? அல்லது கொன்றிட்டாங்களா?? குழப்பமாக இருக்கு!!!"

"லாவண்யா, உன்னால் தான்... எல்லாமே உன்னால் தான்!!!"

நேற்று நடந்த அச்சம்பவம் ஹரிஷை வெகுவாகப் பாதித்திருந்தது; சந்தோஷையும் கூடத்தான்... இருபது வருட நட்பு இருபது நிமிடத்தில் உடைந்து சுக்குநூறாகியது. துரோகமா? அல்லது தோல்வியா? இல்லை குற்றவுணர்ச்சியா? எதுவென்று பிடிபடாத ஒன்று ஹரீஷின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

நேற்று நடந்த அச்சம்பவம்...

★ ★ ★


சந்தோஷின் வீட்டில் ஊரே கூடி நின்றது. அனைவரினதும் வாழ்த்து மழையில் சந்தோஷ் நனைந்து கொண்டிருந்தான். இவன் துன்பங்களுக்கு எல்லாம் தோள் கொடுத்து தாங்கிய உற்ற நண்பன் ஹரிஷ்... இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் நிற்பான் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான தேசிய விருதிற்கான தங்கப்பதக்கம் சந்தோஷின் கழுத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

"ஹரிஷ், எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கடா... ஆனாலும், அன்றைக்கு அவங்கள் அந்த செய்தியைப் பார்த்திட்டு என்னைச் சுடத் திரிஞ்ச போதெல்லாம் காப்பாற்றினது நீ தானே..." கண்களில் நீர் கசிய நன்றிப்பெருக்குடன் ஹரிஷைத் தழுவினான் சந்தோஷ்.

சட்டென தன்னை விடுவித்து, "ம்ம்ம்..." என்று ஹரிஷ் உதித்த வெற்று வார்த்தை சந்தோஷின் சந்தோசத்தைப் பறிக்க போதுமாயிருந்தது.

"அடேய்... உனக்கு என்னடா நடந்தது? ஏன் இப்படி டல்லாக இருக்கிறாய்?  சொல்லடா..." சந்தோஷின் கெஞ்சலுக்கு,

"சந்தோஷ், என்னை விட்டிடு. மனசு சரியில்லை"

"அதுதான் ஏனென்று கேட்கிறேன்..."

"இப்ப சொல்ல ஏலாது..!"

ஹரிஷின் விடாப்பிடி சந்தோஷிற்கு தெரியும். அவன் பிடித்த முயலுக்கு எப்போதும் மூன்று கால்களும் நான்கு காதுகளும் தான். இப்ப ஏலாது என்று சொன்னால் என்ன விலை கொடுத்தாலும் முடியாது. இறுதியாக கேட்போம் என்று விட்டுவிட்டான்.




ஊர் கூடியிருந்த வீடு சகஜ நிலைக்கு திரும்பும் நேரம் ஹரிஷ் தானாகவே சந்தோஷைத் தேடி வந்தான்.

"சொல்லு மச்சான்..." - இது சந்தோஷ்.

பதில் பேரிடியாய் இறங்கியது "மச்சான்???? இந்த உறவெல்லாம் நேற்று வரைக்கும் தான்!!!"

"ஹரிஷ்ஷ்ஷ்ஷ்... என்னடா? என்ன நடந்தது உனக்கு?"

"என்ன நடக்கவில்லை? நம்பியிருக்க ஏன் இப்படிச் செய்தாய்??"

"....???" பேச வார்த்தையின்றி, அது எப்படி என கேட்டுவைத்தது சந்தோஷின் முக பாவனை.

"இன்றைக்கு அவள் உனக்கு மெசேஜ் அனுப்பினவள் தானே..." ஹரிஷின் கண்கள் சிவந்து கோபக்கனல் வீசியது.

"எவளடா..?" கேள்வியாய் வந்த சந்தோஷின் பதிலில் இப்போதும் அப்பாவித்தனம் தான் விஞ்சியிருந்தது.

"அவள்... லாவண்யாதான்!"

"ஓமடா... வாழ்த்தி அனுப்பியிருந்தாள். அதுக்கென்ன??"

"அதுக்கு ஒன்றும் அர்த்தமில்லையென்றால் என்னிடம் ஏன் மறைத்தாய்?"

"................."

"அடேய்... சந்தோஷ்ஷ்ஷ்!!! " உரக்க கத்தினான் கொலைவெறியோடு...

பின்னர் சாந்தமாகியவன் போல,

"சந்தோஷ்... எனக்கு எல்லாம் தெரியுமடா...!!! அன்றைக்கு லண்டனிலிருந்து உனக்கு அழைப்பெடுக்கிறாள்... இன்றைக்கு மெசேஜ் போடுகிறாள்... என்ன நடக்குது இங்கே???"

"ஹரிஷ், இது நீயாடா? ஏன் இப்படி ஆனாய்?? சந்தேகம்... அதுவும் என் மேலே...!!!"

"அதுதான்டா... உன் மேலே தான்!!! அவள் லண்டனுக்குப் படிக்கப் போயிட்டாள் என்று அவளின்ட அம்மா உன்னுடைய அம்மாவிடம் சொல்லி, உன்னுடைய அம்மா உனக்கு சொன்னா என்று நீ சுத்தி வளைச்சுப் புதிர் போட்ட போதே நான் அலேர்ட்டாகி இருக்க வேணும். இப்ப புரியுதடா..."

"ஹரிஷ்... போதும் இத்துடன் நிறுத்திக் கொள்...!!!"

இதன் தொடர்ச்சியாய், ஹரிஷின் கரம் சந்தோஷிற்கு எதிராக நீண்டதும், பதிலிற்கு சந்தோஷ் தடி தூக்கியதும்.... இருபது வருடமாய் ஒன்றாய் நடந்த இரு சோடிக் கால்கள் எதிரெதிராய் நடக்கத் தொடங்கின!!! அவர்கள் நிரந்தரமாகவே பிரிந்து போயினர்.

★ ★ ★

அசம்பாவிதம் ஒன்றில் தான் மாட்டியதாக இப்போது ஹரிஷ் உணர்ந்தான். எதுவும் செய்ய முடியவில்லை. தனது கோமாளித்தனத்தையும், விமான நிலையத்துக்கு தான் வர எடுத்த முட்டாள்தன முடிவையும் எண்ணி நொந்தபடி வெற்று வானத்தை வெறித்த படி நின்றான். ஒரே தெரிவு... என்ன நடந்தாலும், நடந்திருந்தாலும் வீட்டுக்குப் போவதுதான் என எண்ணியவன்... வீடு நோக்கி வாகனத்தை இயக்கினான். வானொலியில் அந்தச் செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது.


சற்று முன்னர் கிடைத்த செய்தியொன்று...
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் இவர் சிறந்த இளம் பத்திரிகையாளராக...." செய்தி தொடர்ந்தது.

இதைத் தொடர லோஷனை அரங்கத்துக்கு அழைக்கின்றேன்.

Saturday, June 19, 2010

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்

விடயத்துக்குள் நுழைய முன்னர்...

காலம் அவளுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தது. இன்றோ, நாளையோ அல்லது இன்னும் ஒரு சில நாட்களிலோ அவள் எங்கள் வீட்டில் புகைப்படமாகவே பிரசன்னமாயிருப்பாள். எண்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்திருந்த என் பாட்டியின் இறுதி ஆசைகளை ஒன்றும் விடாமல் கேட்டு நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பா. அவளுக்குப் பிடித்தமான உணவுகள், உடைகள் முதற்கொண்டு அவள் விரும்பிய உறவுகள் வரை தருவிக்கப்பட்டாயிற்று. எல்லாவற்றையும் அவளே கேட்டுப் பெற்றாள்.

அதுவரை இவள் வன்மம் பாராட்டிய குலத்தாரின் மூத்தவளையும் கூப்பிட்டாள். சாவின் வரவினை எதிர்பார்த்தவாறு அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். குலத்தாரின் மூத்தவளுடன் கதைப்பதன் மூலம் அதுவரை தான் அந்தக் குடும்பத்துடன் கொண்டிருந்த பகைக்கு விமோசனம் தேட முயல்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது போலவே... குலத்தாரின் மூத்தவளுக்கும் புரிந்திருக்கும்...!!!


இனி... இதோ விடயம்...!

தமிழக அரசின் ஏற்பாட்டில் செம்மொழி மாநாடு எனும் ஓர் நிகழ்வு நடந்தேற இருக்கின்றது. அதை முன் வைத்து பலர் பல விதமாக எழுதியாயிற்று. அந்நிகழ்வினை சார்ந்து தனது அரசியலை முன்னெடுக்கின்றது ஒரு கூட்டம்; எப்போது என்ன நடந்தாலும் தமிழக அரசுக்கு சாமரம் வீசும் இன்னொரு கூட்டம் செம்மொழி மாநாட்டின் அவசியம் குறித்து ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றது.



நான் பேசும் தமிழ் மொழிக்கு விழா எடுப்பதில் எனக்கும் பெருமை தான். ஆனால், இச்செம்மொழி மாநாட்டினை தமிழுக்கான விழாவாக கற்பிதம் செய்து பெருமைப்பட என்னால் முடியவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால், இந்நிகழ்வினை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்குத்தானே எடுக்கும் ஒரு பாராட்டு விழாவாக என்னால் அடையாளப்படுத்த முடியும். அவரின் நோக்கில் அது தப்புமில்லை. கலைஞரின் காலம் அவரை நெருங்கும் வேளையில், தான் செய்த சாதனைகளில் தலையாய சாதனை ஒன்றைப் படைக்க விரும்புகின்றார். அதற்கு செம்மொழி மாநாடு என்று பெயர் சூட்டி அழகு பார்க்கின்றார்.

அதை விடுத்து, இந்நிகழ்வை ஈழ வரலாற்றில் பாரிய துரோக நிகழ்வாக அடையாளப்படுத்தி அதைப் புறக்கணிக்கச் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் அர்த்தமற்றது. புறக்கணிப்புக் கோசங்கள் எல்லாம் செம்மொழி மாநாடு நடந்தேறும் வரைக்கும்... அதற்குப் பின்னர், மாநாட்டில் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து விமர்சனம் வடிக்கும் யாவரும் புறக்கணிப்புக்கான முன்னைய காரணங்களை மறந்து போய்விடுவார்கள்.


ஆனாலும், கலைஞரின் அரசியல் சாணக்கியம் எப்போதும் வியந்து போற்றக் கூடியதாகவே உள்ளது. செத்துக் கொண்டிருந்த மக்களின் குருதி கொண்டு தனது வரலாற்றை எழுதியவர்... மூன்று மணி நேர உண்ணாவிரதம் மூலம் முப்பது வருடப் பிரச்சினைக்கு தீர்வு தந்தவராச்சே.!!! இந்த செம்மொழி மாநாட்டையும் அரசியல் படுத்தி ஒரு கல்லில் இரட்டை மாங்காய் விழுத்த முயல்கின்றார். அதன் விளைவு தான்... செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அறிஞர்களை வரவைக்க - வரவேற்க பாடாய்ப்படுகிறார்.

இலங்கையிலிருந்து தமிழ் அறிஞர்களை பங்குபற்ற வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மேல் தான் கொண்ட கரிசனையை புதிய வடிவில் மெய்ப்பிக்க முயல்கின்றார் கருணாநிதி. எத்தனை நாட்களுக்குத்தான் பேனாவும் கடதாசியும் கொண்டு கடிதம் எழுதி, டில்லிக்கு அனுப்பி அரசியல் புரிவது..!

இச்செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து அழைக்கப்பட்டிருப்பவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். பாட்டியின் ஆவி பிரிய முன்னர் அழைக்கப்பட்ட குலத்தாரின் மூத்தவள் பாத்திரம் அவருக்கு... அந்த அழைப்பினை நிராகரித்து தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்க்க வேண்டுமென பலர் குரல்வளை கிழியக் கத்தி ஓய்ந்தும் விட்டார்கள். ஏனய்யா..? சிவத்தம்பி அவர்கள் புறக்கணித்தால் இன்னொரு கறுத்தத்தம்பி ஈழத்தமிழனிடத்தில் இல்லாமலா போய்விடுவான்? கடந்து வந்த பாதைகள் கற்றுத் தந்த பாடங்கள் இவை!!!


பேராசிரியர் சிவத்தம்பி மட்டுமல்ல... அழைப்புக் கிடைத்தால் எல்லோருமாகச் செல்வோம். எங்களைப் பற்றி நாங்களாக பேச இன்னொரு அரங்கம் இது. முத்துக்குமாரனுக்கு நன்றிகளையும், மூன்று மணி நேர உண்ணாவிரத்தத்துக்கு சன்மானமும் வழங்க ஒரு சந்தர்ப்பம். ஈழத்தமிழனாக சென்று... ஈழத்தமிழனை பிரதிநிதித்துவம் செய்து... ஈழத்தமிழனாகவே திரும்புவோம்...! மாலைகளுக்கும், பாராட்டு போதைகளுக்கும் மயங்காதவர்களாக...!!!

Wednesday, May 19, 2010

யாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...


நட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.html


முதலாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பின் போதே, யாழ்தேவி காத்திரமான விமர்சனங்களுக்கு - குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கின்றது. இறுதியாக நண்பர் சந்ருவும் தன் ஆதங்கங்களை இங்கே யாழ்தேவி நோக்கி எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். நிர்வாகிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா...!!!

மே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்..! ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்..! ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா? நிர்வாகிகளே..! யாத்ரா வேலைப்பளு என நீங்கள் காரணம் சொன்னாலும், கல்லெறிபவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல... எனது முதுகையும் குறிபார்க்கத் தவறமாட்டார்கள்!!! தாங்காது என்னுடல்... ஆவன செய்யுங்கள்!!!

யாழ்தேவி நட்சத்திர வார இறுதியில், தினக்குரல் பத்திரிகையில் வெளிவரும் பதிவரின் ஆக்கம் நட்சத்திர வாரத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த என்னை என்ன செய்வது?

எண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள்!!! அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.

அது மட்டுமா? அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே... ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி..!!! ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். "அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?"

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவிக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். கடந்த இரு வாரங்களாக என்னை நட்சத்திரமாக்கி அழகு பார்த்த யாழ்தேவிக்கு நன்றிகள்.

Tuesday, May 18, 2010

யாருக்கும் சொல்லாத கதை


நடு நிசி தாண்டிய பொழுதொன்றில்
நான் தேடும் வதனம் இதுதானென
கனவு வந்து பரிசளித்தது...!!!
கற்பனைகளும் காத்திருப்புக்களும்
களவெடுத்துக் கொண்டன என் இரவுத் தூக்கங்களை...
அல்பங்கள் புரட்டி அடையாளப்படுத்திக் கொண்டதை - ஓர் நாள்
அவசரமாய் முன்னால் நிறுத்தியது அதிர்ஸ்டம்.
அறியாது புரியாது இருந்த
அர்த்தங்களெல்லாம் அருகாமையாக்கி - இன்று
ஓடிக் கொண்டிருக்கின்றது நாழிகை...!!!

Saturday, May 15, 2010

எழுதச் சொல்கிறாய்...!!!


எழுதச் சொல்கிறாய் நண்பா...!
மன்னித்துக் கொள்...!!!
எதையுமே நான் எழுதப் போவதில்லை.
எழுதுவதாலும் தொழுவதாலும்
எதுவுமே ஆகாதென்ற போது
வேண்டாம் இன்னொரு சாகடிப்பு...!

தோழனே...!
நாம் செய்ததெல்லாம் என்ன..?
உன் புத்தகத்தைப் பறித்து,
கரங்களுக்குள் கனரகங்களைப் புகுத்தி,
எல்லையில் உன் கருவி கனல் கக்கியதை
கணனியில் கொண்டாடி
கனவினில் நாடு கண்டோம்...!!!

சமைத்துக் கொண்டிருந்த உன் அம்மா
சரிந்து விழுந்த நாளொன்றில் அவள்
குருதியைப் படமெடுத்து
விற்றுக் கொண்டிருந்தோம்
யாராவது திரும்பிப் பார்க்கமாட்டார்களா என...!
உன் துயரத்தை கூவி விற்று
எம் உரிமையைக் கேட்டோம்.
யாருமே தரவில்லை...!!!

ஓடிக் கொண்டிருந்த வீடியோவில்,
காலிழந்த நீ...
குருதி கொப்பளிக்கும் அம்மா...
பசியையே பல நாளாய்
புசித்த உன் அக்கா மகள்...
சதைத்துண்டங்கள்...
மனித வேட்டையாடிய நாய்கள்...
இவைகளைக் காட்டியாவது
உன்னைக் காப்பாற்றலாம் எனும்
நம்பிக்கை அற்றுப் போன
ஓர் நாளில்
நீ சிறை வைக்கப்பட்டாய்...!!!!

Friday, May 14, 2010

You might also like