Search This Blog

Friday, December 25, 2009

உறவெல்லாம் படமாக... உணர்வெல்லாம் ஜடமாக...

26-12-2004 அந்த நாளை மறக்க நினைக்கின்றேன். ஆனால், மறக்க முடியாத சொந்தங்களின் நினைவுகள் வந்து என் நெஞ்சில் பாரமாக அழுத்துகின்றன. கனவிலும் கற்பனை செய்யாத ஒரு கொடூரம் அந்தக் காலைப் பொழுதில் நினைவினில் மாறாத வடுக்களை வரைந்து விட்டுச் சென்றது. அன்று வரை எங்களுக்கு உணவு தந்த கடல் தாய் அன்று எங்கள் ஊருக்குள் வந்து எங்களையே உண்டு ஏப்பம் விட்ட கொடிய நாள். சுமாத்திரா தீவுகளில் எழுந்த அலைகள் எங்கள் வீட்டுக்கூரைக்கு மேலாகவும் சன்னதமாடும் என்று யார் நினைத்தது...



உறவுகளே... உங்களுக்கு என் அஞ்சலிகள்.





Thursday, December 24, 2009

படம் காட்டும் பதிவுலகம் - கட்டடங்கள் வடுக்களே...


வவுனியாவில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெயர்ந்த முகாமிலுள்ள சிறுவனால் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியம் இது. இன்னொரு ஓவியத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதைந்து போன உயிருக்கும் சிதைந்து போன மக்களுக்கும் மத்தியில்
உடைந்து போன கட்டடங்கள் வடுக்களே அன்றி வலிகளல்ல...
★ ★ ★


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் இரு பிரதான வேட்பாளர்களும்.... (என்ன தான் பேசியிருப்பாங்களோ...? )
★ ★ ★


ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைப் பிரிக்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹைதராபாத் இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீது பொலிஸின் பாய்ச்சல்.
★ ★ ★


தாக்குதலினால் மூக்குடைந்த இத்தாலியப் பிரதமரை இத்தாலியின் தென் நகரொன்றில் இப்படிக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
★ ★ ★


சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை ஆர்ஜன்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸி(22 வயது) வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் கடந்த டிசம்பர் 21 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்போது போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவை பின் தள்ளி இந்த விருதை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்லும் முதல் ஆர்ஜன்டீன வீரரானார். இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

Tuesday, December 22, 2009

மொக்கை...! மொக்கை...!! மொக்கை...!!!

எச்சரிக்கை: இது முற்று முழுதான மொக்கைப் பதிவு (அப்படியென்றால்...?); பல தலைகள் உருளும் பரிகாச விளையாட்டு. சீரியஸ் பாட்டிகள், பாட்டன்கள், பூட்டன்கள் மேற்கொண்டு நுழைய வேண்டாம்.

எந்தப் புண்ணியவானில் இருந்து ஆரம்பிப்பது...? இவர் இருக்கப் பஞ்சமேன்...? இங்கேயும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கத் தயாரானார் வந்தியத்தேவர்.

"மொக்கை எனப்படுவது யாதெனில்...."

சிறிது பொறுங்கள் வந்தி. எந்தக் காரியத்துக்கும் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆகவே,

"வணக்கம் லோஷன்..."

இனித் தொடரலாம் வந்தியத்தேவா.

"அழகை அழகு சொன்னால் தான் அழகாகும் என நான் உளறினால் அது அழகு ஆகாது..."

வந்தி சுத்தமாக விளங்கவில்லை... மொக்கை பின்னவீனத்துவம் ஆனதோ? விளக்கம் வேண்டி அண்ணாந்து பார்த்தேன். அந்த நிலாவைக் கூட காணவில்லை. ஆதித்தன் சுட்டெரிக்கும் வேளையில் அம்புலி தேடிய என் அறிவை என்னவென்பது...? என்ன கொடுமை... ருவீட்டரில் சலசலப்பு!!!

வந்தி தொடர்ந்தார்...

"என் நீலச் சட்டைக்கு வந்த மவுசு... அது அம்மா தந்த பரிசு.."



அவர் கவி(?) முற்றுப் பெற முன்னரே அவள் புரக்கடித்துச் சிரித்தாள். சிந்தனைச் சிறகினை விரித்த போதும், காரணம் புரியவில்லை.

"மொ+க்+கை+ப்+ப+தி+வு= மொக்கைப்பதிவு" பவன் மொக்கைக்கு வரவிலக்கணம் கொடுத்த வேளையில் தான், அங்கே குறிஞ்சிக்குமரன் திருப்பதிகம் ஒலிக்கக் கேட்டேன். திருப்பதிகம் என்றதும் சந்த்ரு ஞாபகத்துக்கு வந்தான். கூடவே, இர்சாத், வரோ... இவர்களையும் இவன் கூட்டி வர மறக்கவில்லை.

எப்படி இருக்கிறீங்கள் என யாரும் கேட்டால் இருக்கிறம் என்ற பதிலில் வரோவும் யோகாவும் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றார்கள். இன்னொருத்தரும் தான்... அவருக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கு.

ஆனால், அந்த குறிஞ்சிக்குமரன் புகழ்பாடி வந்தவரோ ப்ரியானந்த சுவாமிகள். நெதர்லாந்துக் குளிருக்கு 42 ஆம் ஒழுங்கையில் சூடாற வந்திருக்கிறார்.

அப்போதுதான் அந்த ரணகளம் நடந்தது. "புலி உறுமுது... புலி உறுமுது..." எல்லோரும் விக்கித்துப் போனார்கள். வேறு யார்...? அட நம்மட சதீஸன் தான். "வாறான் வாறான் ஓடு ஓடு..." ஓடிப் போன எல்லோருக்கும் பெடியன் இனிப்பு வழங்கிச் சந்தோசித்தான். காரணம் கேட்டேன்... கடந்த 18 ஆம் திகதியுடன் வில்லு வெற்றிப் படம் ஆயிடுச்சாம். சுறா வருகையுடன் குருவியும் வெற்றிப்படமாகிடும் என்ற நம்பிக்கையும் இருக்குதாம். உச்சந்தலையில் சுர் என்றது.

"அதை அவ்ருக்குப் பக்கத்தில் வையுங்கோ... இதை எனக்குப் பக்கத்தில் வையுங்கோ..." கரத்தில் சிவப்பு நிற மாம்பழ ஜூசுடன் இருந்த விமல் சூளுரைத்தது எவர் காதிலும் சரியாக விழவில்லை.

பட்டத்தில் மின் பெற்ற சுபாங்கனின் மூளை துரிதமாக வேலை செய்திருக்க வேண்டும். நொந்து நூடில்ஸாகி ஒடிந்து போயிருந்த புல்லட்டை வம்புக்கு இழுத்தான்...

"புல்லட்... உமக்குத்தானே சுளகுக்காது. விமல்வன்ச என்ன சொன்னார் என்று சொல்லு பார்க்கலாம்."

"விமல் கூட ஒருத்தர் இருக்கிறாரே... அந்த வெற்றியாளன் சொன்னாராம். அவர் அவரை அவரிடத்தில் வைத்திருக்கணுமாம்..." வேண்டுமென்றே புல்லட்டினால் பிளேட் மாற்றப்பட்டது.

"ஐயோ... அரசியல்... நீல அரசியல்..." கூவிக்கூவி... கேவிக்கேவி அழுதவண்ணம் காவமுடியாத நமீதாவையும் காவிக்கொண்டு கங்கோன் ஓடிவிட்டான். யுவராஜ் இற்கு எங்கே பந்து பட்டது என்ற ஆராய்ச்சி அவனுக்காக காத்திருந்தது.

அப்போது தான் பார்த்தேன்... 22 பேர் கொண்ட அணி சிதறிக் கிடந்தது... தெரிந்த பல முகங்கள் தெரியாத முகமூடிகளுடன். :(


தூரத்தே ஓர் உருவம் தெரிந்தது... அசோக்பரன் வந்து கொண்டிருந்தான்.

விமல் கூட இருந்தாரே ஒருத்தர்... வேறு யாருமல்ல. மூன்றாவது தடவையாகவும் ஓர்டர் செய்யப்பட்ட Hot Butter Cuttlefish இனைத் தீர்த்து முடித்த திருப்தி லோஷன் அண்ணாவின் முகத்தில் தெரிந்தது.



இதை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..?

இல்லையில்லை... உங்களைச் சொல்லவில்லை. அண்ணருக்கு இன்னொரு மரக்கறிச் சூப் ஓர்டர் கொடுங்கோ... தனக்குச் சொன்னதென்று லோஷன் அண்ணா குழம்பிவிட்டார்.

இந்தப் பதிவை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..? மொக்கைக்கு ஏது முடிவு..? ஆனாலும், வாழ்க தமிழ்மொழி... வளர்க செந்தமிழ்... என சுபானு தமிழிசை இசைக்க... பால்குடி புதிர் போட... புகைப்படக்கலைஞர் - முன்னாள் பதிவர் - நித்திரை தொலைத்த செம்மல் - மட்டைக்கும் குட்டைக்கும் விளக்கம் சொன்ன நிமல் புகைப்படம் சுட மொக்கை நிறைவுக்கு வருகிறது.

மது... அடே... உன்னை எனக்குத் தெரியாதடா. தெரியும் என்றால் கடலேறி இழுத்துப் பூட்டப்படும்.

Tuesday, December 15, 2009

வேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்



நண்பா,

பல வேளைகளில் சொல்ல வேண்டுமென்று நினைத்து தயங்கி நின்றேன். இப்போது சொல்கின்றேன்...

"வேட்டைக்காரன் பகிஷ்கரிப்பை வலிதாக முன்னெடுக்கவும்" எனத் தலைப்பிட்டு - தமிழகப் பிரச்சாரப் பீரங்கிகள் றேஞ்சிலே என்னை நினைத்து நீ அனுப்பிய மின்னஞ்சல் எரிச்சலைத்தான் எனக்கு ஊட்டியது.

நடிகர் விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க அளிக்கப்பட்ட உமக்கு வலிதான காரணங்கள் இரண்டு... முதலாவது, விஜய் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ்காரர்களை சந்தித்து அவர் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடியது. இரண்டாவது, இலங்கை இராணுவத்துக்கு இசையமைத்த இராஜ் வேட்டைக்காரன் படத்தில் விஜய் அன்ரனி உடன் இணைந்து இசையமைப்பது.

நண்பா, விஜய் மட்டுமல்ல... இந்தியாவின் எல்லா அரசியல்வாதிகளும் அவர்களின் அரசியல் வாழ்வு கருதி அடிக்கின்ற பல்டிகளுக்காக இனியும் நாங்கள் வாய் பார்த்துக் காத்திருக்கப் போகின்றோமா...? நேற்று காங்கிரஸ்காரர்களை சந்தித்த விஜய் நாளை சீமானைக் கட்டிப்பிடித்து "போஸ்" கொடுப்பதால் மட்டும் - அன்று அஜித், அர்ஜூன் அடித்த கரணம் போல - வேட்டைக்காரன் ஈழத்தமிழர்களுக்கான படமாகிவிடுமா..?

பருத்தித்துறை வீதியில் பயணிக்கும் போது கொடிகாமம் சந்தியைக் கடந்த பின் மனதிலே ஒரு வித அமைதி குடி கொள்ள - ஒரு முறை அவர்களுக்காக நான் என்றைக்கும் வணங்கிச் செல்கின்றேன். அந்த உணர்வில் - தனது இராணுவத்துக்காக தலை வணங்குகின்ற இராஜின் உணர்வில் எப்படி எங்களால் குற்றம் காண முடியும்...?

இலங்கையின் ஒவ்வொரு சிங்களக் குடிமகனும் தன் நாட்டுப்படைகளுக்கு தலை வணங்குவதை மட்டும் காரணம் காட்டி கொழும்பிலுள்ள என்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு அவர்களின் கால் நக்கியாய் என்னைக் காரணப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. இராஜ் இனைப் புறக்கணிக்க முடிவு செய்தால் வேட்டைக்காரனை மட்டுமல்ல - கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாதே...

எங்கள் உறவுகளிடம் வேட்டைக்காரனைப் பற்றிக் கேட்டுப்பார்த்தால் "தெரியாது" என்றுதான் பதில் தருவார்கள். தன் மகன் எங்கே..? அவன் எப்போது வருவான்..? என்பதை விட உன்னையும் என்னையும் போல வேட்டைக்காரனுக்காக அலட்டிக் கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படித்தான், அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள்... ஏனெனில், எங்கள் பார்வையில் அது கலாச்சார சீரழிவாகிவிடுமே...

நீ குறிப்பிட்ட ஈழத்தமிழர் புறக்கணிப்பு தலையங்கத்துடன் மட்டும் தங்கி விட, படத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றித்தானே அறிக்கையின் உள்ளடக்கம் அதிகமாக பேசுகின்றது. என் நண்பன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது... இது இதேதான்...
"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்"

நான் விஜய் என்னும் நடிகனின் தீவிர ரசிகனும் அல்ல... அவன் படங்களை முந்திக் கொண்டு பார்க்கத் துடிப்பவனும் அல்ல. ஆனால், முதல் நாள் காட்சியில் களேபரம் நடக்குமே... எப்படியென்றால், கடந்த நவம்பர் 27 - புனிதமான நன்னாளில் சுவீஸில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் செய்த கோஷ்டி மோதல் போல... சில காட்சிகளை வேண்டுமானால் உனக்கும் அனுப்பி விடுகிறேன்.

ஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.

சந்திப்போம்.

Monday, December 14, 2009

படம் காட்டும் பதிவுலகம் - மூக்குடைந்த பிரதமர்

73 வயதுடைய இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் மீது நேற்று நடாத்தப்பட்ட திடீர்த்தாகுதலில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவருடைய இரு பற்களும் நொறுக்கப்பட்டுள்ளன.

மக்களுடன் பிரதமர் அளவளாவிக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு மனநோயாளி எனவும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.




அங்கிருந்த பாதுகாப்பு கமரா ஒன்றில் பிரதமர் மீதான தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

★ ★ ★



முகத்திலும் வாயிலும் தாக்குதலுக்கு இலக்காகிய இத்தாலியப் பிரதமர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பாதுக்காப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.

★ ★ ★



நேற்று தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகிப் போட்டியில் கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த‌ கயானி அல்டோரினோ (23 வயது) வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

★ ★ ★



சமாதானத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் நிகழ்வின் சிறப்பாக முன்னைய விருதாளர்களின் பெயர்ப் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொள்கிறார்.

★ ★ ★



இலங்கையுடனான இறுதி ருவென்ரி-20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து தொடரை சமப்படுத்திய பெருமிதம்...

பந்து வீச்சில் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி, துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது அதிரடியாக 60 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

சிறப்பம்சம் என்னவென்றால், தனது பிறந்தநாளன்று - சொந்த மைதானத்தில் - கட்டிப்பிடித்து முத்தங்கள் வாங்கிய மைதானத்தில் இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

Sunday, December 13, 2009

பதிவர் சந்திப்பு 2 - சில புகைப்படங்கள்

இன்று ( டிசம்பர் 13, 2009) சிறப்புற நடைபெற்ற இலங்கைத்தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில...


முத்துக்கள் மூன்று - 02

காதலைப் பாடாத கவிஞன் இல்லை என்பது போல காமத்தைத் தொட்டுக் கவிபுனையாக் கவிஞனும் இல்லையெனலாம்... காமத்தை காதலினூடு குழைத்து தருகின்ற பாடல் இது. காமத்தை பச்சையான ஆபாசங்களாக முன்வைக்காது இரட்டை அர்த்தத்துக்குள் நுழைந்து காதுக்கினிய கானம் தருகின்றான் இந்தக் கவிஞன்.

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற...

இப்பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல்.

இம்மாதம் தனது அறுபதாவது அகவைக்குள் காலடி எடுத்து வைத்த நடிப்புலக மேதை ரஜனி அவர்கள் நடித்த தங்கமகன் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது.

இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியெனப் பலர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன். (இதனைத் தெளிவுறுத்திய கானாபிரபா அண்ணாவுக்கு நன்றிகள்)

இளையராஜா இசையமைக்க எஸ்.பி.பி.யுடன் இணைந்து எஸ்.ஜானகி இப்பாடலைப் பாடியுள்ளார்.









★ ★ ★

முண்டாசுக் கவிஞன் பாரதியார் எழுதி பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் ஒலி ஒளி வடிவம் அளிக்கப்பட்ட பாடல்களில் என்றைக்கும் நின்று அர்த்தம் அளிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்து போனதனால்
நானும் ஓர் கனவோ... இந்த ஞாலமும் பொய் தானோ...?

வாழ்வின் விளிம்பில் இருந்தவாறு தான் நடந்து வந்த பாதைகளையும், சுமந்து வந்த பாரங்களையும், சமூகம் தனக்குத் தந்த சன்மானங்களையும் எண்ணிப்பார்க்கின்றான் இக்கவிஞன்.

சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, சுதந்திர தாகம், காதல், ஆன்மிகம்... என இவன் தொட்டுச் செல்லாத பக்கங்களே இல்லை எனுமாப் போல் எந்தக்காலமும் நின்று வாழும் கவிதை படைத்த எட்டயபுரத்தோன் இவன்...

கேட்டுப்பாருங்கள்... இளையராஜாவின் இன்னிசையில் ஹரிஸ் ராகவேந்திராவின் குரலசைவில் ஒலிக்கின்றது இப்பாடல்...









★ ★ ★

அண்மையில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் பலமுறை பலராலும் கேட்டும் பார்த்தும் முணுமுணுக்கப்பட்ட பாடல் இது.

எந்தவித பிண்ணனிக்காட்சிகளுமற்று - வெட்ட வெளி போன்ற பிரதேசத்தில் காதலனும் காதலியும் இணைந்து காதலிசைப்பது போன்ற பாடலுக்கான காட்சி பலமுறை பார்த்தும் அலுக்காத ஒன்று...

நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா

பாடலின் ஒவ்வொரு வரிகளும் காதலர்கள் பலரின் கடிதங்களில் மேற்கோளிடப்பட்டன.

சர்வம் படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையமைக்க ஜாவேட் அலி உடன் இணைந்து மதுஸ்ரீ பாடுகின்றார்.








Wednesday, December 9, 2009

அம்மாக்கா

கனகத்தார் வீட்டுப்படலையைத் திறக்கும் போதே "உவர் இப்ப என்னத்துக்கு வாறார்.." என்று அலுத்துக் கொண்டேன். ஆனாலும், மனுசன் பூராயம் புடுங்கத்தான் வருகுது என்று விளங்காமலும் இல்லை. நேற்றுத்தான் "உவ்வளவு நடந்தும் உவன் கனகன் இன்னும் திருந்தவில்லை" என்று பக்கத்து வீட்டுக்கு குடியிருக்க வந்த சரசு ஆச்சி அம்மாவுக்குச் சொல்லிக் கவலைப்பட்டா. மனிசி பாவம்... மூத்தது இரண்டும் எங்கேயென்று தெரியாமல் தவிக்க கனகத்தார் போய் நாட்டாமை கதைச்சிருக்கிறார்.

"பிள்ளை எப்படி இருக்கிறாய்" நான் எதிர்பார்த்தது போலவே அக்காவிடம் தான் அவர் கதையைத் தொடக்கினார்.

"இருக்கிறம்..." நீண்ட பெருமூச்சுடன் வெளிப்பட்ட அவள் பதிலில் வெறுமை தெரிந்தது. உண்மையாக எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இன்று 'உறவு இணைப்பாக' எங்களிடம் வந்திருக்கிறாள். இப்ப கொஞ்சம் முதல் தான் வெளிநாட்டிலுள்ள ஒருத்தனிடம் உதவி கேட்க கோல் எடுத்தவள் டெலிபோனையே அடிச்சு நொறுக்கும் கோபத்தோடு தூக்கி எறிந்து விட்டு இருக்கிறாள். பிறகென்ன... மே 17 என்ன நடந்தது... எப்படி வந்தனீங்கள்... அவர் எங்கே... இத்தனை கேள்விகளுக்கும் குறுக்கு விசாரணைகளுக்கும் பதில் சொல்லித்தான் யூரோக்கள் பெற வேண்டுமா..?

அந்த நேரம் பார்த்து கனகத்தார் இன்னொரு கேள்வி கேட்டார். "பிள்ளை... உவள் அம்மாக்கா உங்களுக்கு கிட்டவாகத்தானே இருந்தாள். இங்கால எங்கேனும் வந்தவளோ...?"

★ ★ ★

அம்மாக்காவை எனக்கும் தெரியும்... 15 வருசத்துக்கு முதல் - நான் சின்னவனாக இருக்கும் போதே தினமும் அவளைக் காணுவேன். காலையிலே நித்திரையாலே எழும்பி வேலியிலே வேப்பங்குச்சி முறிச்சு பல் தீட்டும் போது ஒரு உருவம் கடற்கரையாலே ஓட்டமும் நடையுமாக வரும். ஐயன் சம்மாட்டியின்ர கரைவலை குறுகிற நேரமும் அதுதான். தலையிலே மீன் சந்தைப்பெட்டியைக்காவிக்கொண்டு வாற அந்த உருவம் தான் அம்மாக்கா.

அவளுக்கு எப்படி அம்மாக்கா என்ற பெயர் வந்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் அவள் அம்மாக்கா தான்.

அப்போது, அவளுக்கு ஒரு மகள் படிச்சுக் கொண்டு இருந்தாள். அதைத்தவிர அவளுக்கு சொந்தமென்று ஊருக்குள் யாரும் இருந்தாதாக ஞாபகமில்லை. அவள் தலை சுமக்கின்ற அந்த சந்தைப்பெட்டிதான் அவளுக்கும் மகளுக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அம்மாக்கா வீங்கிப்போன முகத்துடன் எங்கட வீட்டுக்கு வந்தாள்... அவள் கண்கள் சிவந்து போயிருந்தன. அம்மாவை தனியக் கூட்டிக் கொண்டு போய் விம்மி விம்மி அழுதாள்... பார்க்கப் பாவமாய் இருந்தது.

அம்மாக்காவுக்குத் துணையாய் இருந்த அவள் மகளும் போய் விட்டாளாம்... அவளைப் பார்க்கப் போறதுக்குத்தான் காசு மாற வந்தவள் என்று அவள் போனதுக்குப் பிறகு அம்மா சொல்லிக் கவலைப்பட்டா.

அம்மாக்காவின் மகள் மட்டுமல்ல... பல இளசுகள் போய்க் கொண்டிருந்த காலம் அது...

அதற்குப் பின்னும் அவள் சந்தைப் பெட்டி சுமந்தாள். அவள் மகளுக்காக...

★ ★ ★

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக கனகத்தார் கேட்டதுக்கு அக்கா பதில் சொல்லத் தொடங்கினாள். கனக்கின்ற மனதை எங்கேயாவது இறக்கி வைத்தால் சுகமென நினைத்திருப்பாள் போல...

"அம்மாக்காவின்ர மகள் அங்கேயே கலியாணமும் முடிச்சு அவளுக்கு மூன்று வயதில ஒரு பெடியனும் இருந்தது... அவன் பேர்த்தியைப் போல நல்ல வடிவும் நிறமும்... அம்மாக்காவுடன் தான் இருந்தவன்.


நாங்கள் வாறதுக்கு மூன்று நாளுக்கு முன்னமும் சந்திச்சம். அப்பத்தான் சொன்னவா... 'இப்பவெல்லாம் ஒவ்வொரு நாளும் மகளும் மருமகனும் வந்து பேரனைப் பார்த்து கொஞ்சிப்போட்டு போகினம். அதுகள் வராமல் எப்படிப் பிள்ளை இவனைக் கொண்டுவாறது...? ஏதோ நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வேற வழி இல்லை... ஆனால், நான் கும்பிடுற மண்டலாய்ப்பிள்ளையார் கைவிடமாட்டார் பிள்ளை...'

மனிசியைப்பற்றித் தெரியும் தானே. மகளுக்காக உயிரையும் கொடுக்கும். பிறகு நாங்கள் வந்திட்டம். என்ன பாடோ தெரியவில்லை..."

கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் 'உச்' கொட்டி, நீண்டதாய் பெருமூச்சு விட்டு கண்ணீர் கசிந்தார்கள். ஆனால், அக்காவோ பல கதைகளில் இதுவும் ஒன்று எனுமாற்போல் சொல்லி முடித்தாள்.

இப்போது கனகத்தாரின்ர முகத்தை அவதானித்தேன். என்னாலே நம்ப முடியவில்லை. சத்தியமாக அவர் முகத்திலும் கவலை ரேகைகள் வரைந்திருந்தன... ஆனால், "ஒப்பந்த காலத்திலே அம்மாக்கா கொஞ்சக்காசு வாங்கிக் கொண்டு போனவள்... அதுதான் கேட்டன்..." என்ற கனகத்தார் சடக்கென எழும்பி சறத்தை மடிச்சு தொடை தெரியக் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினார்.

அம்மாக்கா எப்போதும் போலவே இப்போதும் கெட்டிக்காரி... கடனாளிகளாக ஒருத்தரையும் விட்டு வைக்காமல் மகளையும் பேரனையும் கூட்டிக் கொண்டே போய் விட்டாள்...


Monday, December 7, 2009

படம் காட்டும் பதிவுலகம் - 02


இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மோசமான அனர்த்தம் தந்த வடுக்கள் இவை. டிசம்பர் 3, 1984 அன்று இந்தியாவின் போபாலில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழ்ந்தனர். இன்றும் கூட அங்கு பிறக்கின்ற குழந்தைகளை அன்றைய கொடூரம் விட்டு வைக்கவில்லை.
(படம்: பிபிசி இணையத்தளம்)

★ ★ ★



காலம் மாறிய கோலம். இன்று எதிரும் புதிருமாய்....

★ ★ ★



உலகளாவிய ரீதியில் டிசம்பர் முதலாம் திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று பிபிசி செய்திச்சேவையின் இணையத்தளத்தில் காணப்பட்ட அதிர்ச்சிகரமான செய்தி இது.

நியூசிலாந்திலுள்ள ஒருத்தர் உறக்கத்திலிருந்த தன் மனைவிக்கு ஊசி மூலம் HIV கிருமிகளை உட் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிபிட்ட அந்த நியூசிலாந்து வாசிக்கு ஏற்கனவே HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆனால், அவர் மனைவியோ அல்லது பிள்ளைகளோ எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை. அப்படியாயின், தன் மனைவிக்கு இவர் ஏன் பலவந்தமாக தன் இரத்தத்தை செலுத்தினார் என்ற கேள்விக்கு அவர் தரும் பதில்... தன் மனைவி எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுவிடலாம் எனப் பயந்து தன்னுடனான உறவுகளைத் தவிர்த்து வந்தாளாம்...

★ ★ ★



உலகை ஆட்டிப்படைக்கும் பன்றிக்காய்ச்சலின் விபரீதம்....

★ ★ ★




அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கட் ஒன்றைக் கைப்பற்றிய மகிழ்ச்சியினை ஹர்பஜனுடன் பகிரும் சிறீசாந்.

Sunday, December 6, 2009

முத்துக்கள் மூன்று - 01

என் மனதை விட்டு அகலாத - நான் ரசிக்கின்ற - சில வேளைகளில் விமர்சிக்கின்ற பாடல்களை முத்துக்கள் மூன்றாக இங்கு தருகின்றேன்; இனியும் தருவேன்.

இப்பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலாயினும், இன்னும் இனிமை கெட்டு விடாமல் ரசித்துக் கேட்கக் கூடிய பாடல்.

என்னைச் சுற்றியிருக்கின்ற சமூகத்தின் வேதனைகளையும், அவர்களின் ஜீவனோபாய போராட்டத்தின் கவலை தோய்ந்த பக்கங்களையும் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் இதுவாகுமா?

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்

மீனள்ள கடலேறிச் சென்றவன் திரும்பிக் கரை தொடும் வரை துணையவள் தவிக்கும் தவிப்பினை சொற்கள் கொண்டு வடித்து விட முடியாது.

சில சமயங்களில் அவன் வெறும் கையுடன் கசிந்த கண்களுடன் கரை திரும்பி இருக்கின்றான்... சில சமயங்களில் ஆயிரங்கள் தாண்டி இலட்சங்களும் அள்ளி வந்திருக்கின்றான்... கடவுளும் கைவிட்ட சமயங்களில் சூறாவளியும் புயலும் அவனை அள்ளிச் சென்றிருக்கின்றன... அரக்கர்கள் இரத்தம் குடிக்க, மீன்கள் உடல் தின்ன மூன்று நாள் கழித்து கரையேறும் அவன் சன்னம் துளைத்த சடலத்தின் ஊர்வலம் பலவற்றில் என் கால்கள் நடந்திருக்கின்றன...

கேட்டுப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டித் திரைப்படத்தில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம். செளந்தர்ராஜன் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி.






★ ★ ★

எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யாரென்றால் அது என்றைக்கும் இளையராஜாதான். பாடகர்களைப் பட்டியலிட்டால், மற்ற எல்லோரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பின்னால் தான். இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணி தந்த பாடல்களில் எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

இப்பாடலின் ஒவ்வொரு கருத்தாழமிக்க வரிகளையும் எஸ்.பி.பி.இன் தேன் குரலசைவில் இளையராஜாவின் இன்னிசையில் கேட்கும் போது உலகை மறந்து கண்மூடி இரசிக்கின்றேன்.

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் ஆழமிக்க வரிகள் இவை. கேட்டுப் பாருங்கள்....







★ ★ ★

வான வெளி நிலா கண் சிமிட்டும் நேரம்
மனம் ஆசைகள் ஆயிரம் கொள்ளும்...
அவள் தோள் தழுவி மடி தவழ
இவன் எழுதிய அஞ்சலும் பதில் பெற்றதே...

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.





மீண்டும் சந்திக்கின்றோம்

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களாகிய நாம் இரண்டாவது தடவையாக மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம். கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009)  கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.



இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு



நிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி 



நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை 
  • புதிய பதிவர்கள் அறிமுகம் 
  • கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் 
    • பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன. 
  • கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை 
    • காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன 
  • சிற்றுண்டியும் சில பாடல்களும் 
  • கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது? 
  • கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் 
    • பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும் 
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி 
    • கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும். 
  • உங்களுக்குள் உரையாடுங்கள்


கடந்த தடவை போன்று இச்சந்திப்பும்   http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.

You might also like