Search This Blog

Monday, December 8, 2008

கட்சித்தாவல் இங்கு சகஜமடா....

துணைக்கரம் கேட்ட அழைப்பை உயிர்வாழ்தலுக்கான இறைஞ்சல் என்கின்றார்கள் என நண்பனொருவன் சொன்னதன் அர்த்தம்...??? தெரியவில்லை. 'நான் அவனில்லை' என்பதற்காகவேனும் சிந்திக்காமல் இருப்பதே நல்லது. நண்பன் துணிந்தவன் எதையும் சொல்லிவிட்டுப் போகட்டும்.

வீட்டுக்குள் குழந்தையின் கதறலை மிஞ்சிய தடியின் ஓசை... அவன் அழுவது வெளியில் கேட்கக்கூடாதாம். தந்தையின் குரல் விரட்ட... அவர் கையிலுள்ள தடி தன் வேலையைப் பிசகின்றி செய்வதை ஊகிக்க முடிந்தாலும், வெளியார் தலையிட முடியாதே... அது அவர்கள் வீட்டுச் சமாச்சாரம். ஆனாலும், அழக்கூடாது என்று அடித்தால்??? விடை தெரியவில்லை.

வளங்கொழித்த மண்ணில் இன்று எங்களைத் தீண்ட எவரையும் அனுமதிக்காத நிலையில் வஞ்சகமின்றி அரவங்கள் தீண்டிச் செல்கின்றன. இது இலக்கிய நயம் அல்ல... ஒரு இதயத்தின் அலறல் என்கின்றது இணையத்தில் வந்த மடலொன்று.

செத்துக்கொண்டிருக்கும் எமக்காகவும் பேசுங்களேன் என்று கேட்டவர்களுக்கு வந்த பதில். சாப்பிடுங்கள்... உங்களுக்காக அழுகின்றோம்.... இப்படிச் சிலேடை பாடும் சிலருக்கு மேற்கோள் காட்ட இருக்கவே இருக்கிறது பகவத் கீதை. எல்லாம் நன்றாக நடக்கும்...

பதவி விலகல், சர்வகட்சி மாநாடு என எங்கள் காதில் பூச்சுற்றிய போதே உங்களை அவன் எடை போட்டு விட்டான் அரசியல் கோமாளிகளென... இப்படிப் பின்னூட்டமிட்டதை நீக்கிவிட்டார்களாம் புலத்திலுள்ள ஒருத்தன் அழுது கொண்டிருக்கின்றான்.

தமிழக காலம் முடிந்து ஹிலாரி பருவகாலம் ஆரம்பமாகின்றதாம். குடுகுடுப்பைக்காரன் குறி சொல்லிச் செல்கின்றான். "ஒருவன் ஒருவன் முதலாளி..." எங்கோ தொலைவில் கேட்ட பாட்டு நெருங்கியது அறிந்து அழுத பிள்ளை ஐஸ்ப்பழம் வாங்க வெளியில் வருகிறது.

ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிர்க்கட்சி பிரதித்தலைவர் பதவி காத்திருக்கின்றதாம். வானொலி செய்தி கேட்ட உடனேயே என் நண்பனொருத்தன் கை கால் விரல் மடக்கி எதற்கோ கணக்குப் பார்க்கின்றான். திருந்தாத ஜென்மம். சிலர் இருந்த கட்சிகளை விட இருக்காத கட்சிகளைப் பட்டியலிடுவது சுலபமாகின்றது. கட்சித்தாவல் இங்கே சகஜமடா.....

No comments:

Post a Comment

You might also like