Search This Blog

Monday, December 29, 2008

விடைபெறும் 2008 - ஈராக்கில் பலியெடுக்கப்படும் உயிர்கள்

ஈராக் மீது அமெரிக்கா இராணுவம் படை நடவடிக்கையை முடுக்கி விட்ட போது கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவது ஈராக்கின் அணுவாயுத உற்பத்தி. மற்றையது பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தல்(கவனிக்க:- இங்கு பேசப்படுவது ஈராக்கிய யுத்தம் பற்றி). ஆனால், அமெரிக்காவின் இந்த இரண்டு காரணங்களும் ஐ.நாவினதும் - உலகத்தினதும் இரு காதுகளிலும் சுற்றப்பட்ட பூக்களாகின என்பது தான் கறைபடிந்த வரலாறு. அமெரிக்கா தேடிய அணுவாயுதம் ஈராக்கில் கிடைக்கவுமில்லை. அவர்கள் வரையறை செய்த பயங்கரவாதத்தை பூண்டோடு கருவறுக்கவும் முடியவில்லை. மாறாக, தனக்கு சவால் விட்ட எதிரி சதாம் ஹூசனை தூக்கிலிட்ட திருப்தியுடன் ஒரு சொல்லில் ஈராக் மண்ணிடம் மன்னிப்புக் கேட்டவாறு பெட்டி படுக்கைகளைக் கட்டிவிட்டார் புஷ். ஆனால், ஈராக்கின் நிலை...?

கடந்த காலங்களில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்புக்களும்
தற்கொலைத்தாக்குதல்களும் முடிவுக்கு வரவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் ஈராக்கிய மக்கள் 2008ஐ வரவேற்ற போது... வருடத்தின் முதல் நாள் புலர்ந்ததே கந்தக நெடியுடன்தான்.

ஈராக்கின் பக்தாத் நகரில் ஷியாம் முஸ்லிம் போராளி ஒருவரின் மரணச்சடங்கில் மரண ஓலம் எழுந்தது. தற்கொலைப் போராளியொருவர் நிகழ்த்திய தாக்குதலில் 30பேர் சாவடைய பலர் காயங்களுக்குள்ளாகினர். தாக்குதல் நடைபெற்ற உடனேயே அமெரிக்காவும் ஈராக்கும் அல்ஹைடாவை நோக்கி குற்றம் சுமத்தி விரல் நீட்டினர். வழமைபோன்று முன்னைய காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இத்தொகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாய் திருப்தி வேறு! பாவம் ஈராக்கிய மக்கள்... அவர்களுக்கும் 2008 அழுது கொண்டே பிறந்தது.

அங்கு பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் அம்மக்களின் மானிட அவலங்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மார்ச் மாதத்தில் ஈராக்கின்
வடபகுதியில் உள்ள ஹாலிஸ் நகரில் ஈராக்கிய படையினரால் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழியில் காணப்பட்ட சடலங்கள் குறிக்கப்பட்ட ஒரு நாளில் புதைக்கப்படாமல் வெவ்வேறு நாட்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்த ஈராக்கிய அரசு, அல்ஹைடாவை சுட்டி குற்றம் சாட்டியது. வருட முதல்தினத்தில் இடம்பெற்றதைப் போன்று, ஏப்ரல் மாதமும் ஈராக்கின் வடபகுதி நகரான பகுவாவில் உள்ளூர் போராளிக்குழுவினரின் மரணச்சடங்கில் ஏற்பட்ட தற்கொலைத்தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

ஜூன் 18... ஈராக்கிய மக்கள் வேலை முடிந்து பேருந்துகளுக்காக காத்து நின்ற மாலைப் பொழுதினில், தென் ஈராக்கிய பஸ்தரிப்பிடமொன்றில் இடம்பெற்ற கார்க்குண்டுத்தாக்குதலில் 63 பேர் பலியானதுடன் 73இற்கு அதிகமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவும் ஈராக்கிய படைகளும் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டோம் என அறிவித்த ஒரு சில நாட்களில் இத்துயரம் நடந்தேறியது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் ஆயிரமாக இருந்த உயிரிழப்புக்கள் மே மாதத்தில் ஐநூறாக குறைந்துவிட்டன என வெளிவந்த அறிக்கையே அங்கு நடைபெறும் கோரச்சம்பவங்களின் பதிவாகின்றது.

டிசம்பர் 11... பல சமூகத்தவரும் வாழும் ஈராக்கிய வடபகுதியான கிர்குக் நகரில், ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக உண்டு களித்துக் கொண்டிருந்த ஹோட்டலில் அந்த அநியாயம் நடந்தேறியது. உடலினுள் மறைக்கப்பட்ட குண்டுடன் உணவகத்துக்குள் நுழைந்த நபர் தன்னைத்தானே வெடிக்க வைக்க 55 பேர் பலியானதுடன் ஆகக்குறைந்தது 120 பேர் படுகாயமடைந்தனர்.

2008இல் மட்டும் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் குண்டுகளினால் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன என்பது ஜீரணிக்கமுடியாத உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிட்டிருக்கும் போராளிக்குழுக்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களும் ஆட்சியாளர்களின் பலவிதமான அடக்குமுறைகளும் ஈராக்கிய மக்களை மேலும் மேலும் நரக வாழ்க்கைக்குள் தள்ளிக் கொண்டேயிருக்கின்றன. போலித்தனமான காரணங்களைக் கற்பித்து அம்மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம் என்ற உச்சிகுளிரும் வாசகங்களுடன் ஈராக் மீது படையெடுத்த வல்லரசுகள் சாதித்தவை பூச்சியம். அதை உணர்ந்து அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப எத்தனிக்கும் இக்காலப்பகுதியில் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை கண்ணீரில் கரைகின்றது. 2009 அவர்களுக்கு கை கொடுக்குமா...? அல்லது அதே தற்கொலைத்தாக்குதல்களும் கார்க்குண்டுகளும் தான் தொடரப் போகின்றதா...? வல்லரசுகளும் முளைவிட்ட பயங்கரவாதக்குழுக்களும் பதில் தரட்டும்...

2008 இரத்தக்கறைபடிந்த ஈராக்கில்,
ஜனவரி 01 - தற்கொலைத்தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி, 32 பேர் படுகாயம்.
பெப்ரவரி 01 -
தற்கொலைத்தாக்குதலில் 53 பேர் பலி, 94 பேர் படுகாயம்.
பெப்ரவரி 05 - பாரிய மனித புதைகுழி கண்டுபிடிப்பு.
மார்ச் 06 - இரட்டைக்குண்டுத்தாக்குதலில் 68 பேர் பலி, 130க்கு மேற்பட்டோர் காயம்.
ஏப்ரல் 14 - மனித புதைகுழி கண்டுபிடிப்பு.
ஏப்ரல் 28 - நூற்றுக்கு மேற்பட்ட சடலங்களைக் கொண்ட இரு பாரிய புதைகுழிகள் கண்டு பிடிப்பு.
ஜூன் 18 - கார்க்குண்டுத்தாக்குதலில் 63 பேர் பலி, 73 பேர் காயம்.
ஜூலை 09 - 21 சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு.
ஜூலை 28 - தற்கொலைத்தாக்குதலில் 50 பேர் பலி, 250 பேர் காயம்.
ஓகஸ்ட் 14 - தற்கொலைத்தாக்குதலில் 19 பேர் பலி.
டிசம்பர் 04 - குண்டு வெடிப்பில் 22 பேர் பலி, 167 பேர் காயம்.
டிசம்பர் 11 - தற்கொலைத்தாக்குதலில் 55 பேர் பலி, 120 பேர் காயம்.
டிசம்பர் 18 - இரட்டைக் குண்டுத்தாக்குதலில் 18 பேர் பலி.

4 comments:

  1. what G.Bush have earned during his 8 years president service!can you tell me?

    ReplyDelete
  2. அமெரிக்கா ஈராக்மீது போர்தொடுத்ததுக்கு காரணம் என்ன?எனக்குக்கிடைத்த ஆக்கத்தைத் தருகிறேன்-->
    http://sultangulam.blogspot.com/2008/08/2.html
    எனக்கு இது உண்மை போலத்தான் விளங்குது... நீங்க என்ன நினைக்குறீங்க?

    ReplyDelete
  3. ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மகத்தான போராளிக்குழுக்களின் தாக்குதல் காரணமாக கொல்லப்படுகின்றனர்.மகத்தான போராளிக்குழுக்களின்
    செயல்களை நாம் குறை சொல்ல கூடாது.

    ReplyDelete
  4. மகத்தான போராளிக்குழுக்களின்
    செயல்களை நாம் குறை சொல்ல கூடாது.


    பெயரில்லா நீங்கள் இட்ட கருத்தினில் தொக்கி நிற்கும் விடயங்கள் நிறைய. ஆனாலும், அப்பாவி மக்களின் உயிர்கள் காரணமின்றி காவு கொள்ளப்படுவது எவ்வகையில் நியாயம்..?

    ReplyDelete

You might also like