Search This Blog

Saturday, December 6, 2008

மலேசியாவில் பிரிந்த உறவு

விதி... அதுதான் வாழ்க்கைச்சக்கரத்துக்கு பாதை வரைந்து கொடுக்கின்றது. ஆனால், தன் மகன் பட்டம் பெற்று பொறியியலாளனாக வருவான் எனக்காத்திருந்தவர்களிடம் அவன் இறுதி ஊர்வலத்துக்கு தயாராய் வந்ததை விதி என்பதா? அந்தச்சிற்றுண்டிச்சாலையில் தேநீர் குடிக்கப்போனதன்றி வேறெதுவுமே அவன் செய்யவில்லை. ஆனாலும் அவன் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

சிறீஸ்கந்தராஜா சாரங்கன்
இவன் மலேசியாவின் University of Nattingham Malaysia பல்கலைக்கழகத்தில் மூன்றாவது கல்வியாண்டின் பொறியியல் மாணவன். 26 நவம்பர் 2008 அன்று வன்முறைக்கோஷ்டியொன்றின் தாக்குதலுக்கு இலக்காகியதில் இவன் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. தாக்குதலாளிகளின் இலக்கு வேறாக இருந்த போதிலும் அவர்களின் கோரக்கண்களுக்கு இந்த்ச்செல்வத்தை பிரித்தறிய முடியாததுதான் கொடுமையிலும் கொடுமை.

அண்ணன் இங்கு (இலங்கையில்) பொறியியல் படிக்கின்றான். நான் மலேசியாவில் படிக்கப் போகின்றேன் என பெற்றவர்களின் ஆசீர்வாதத்துடன் விமானமேறிய இவன் இங்கு போலவே அங்கும் படிப்பில் சிகரத்தில் இருந்தான். இலங்கையில் தாண்டவமாடும் போர் இவன் குடும்பத்தை அலைக்கழித்த போதும், ஆரம்பக்கல்வியை யாழ் மாவட்டத்திலும் பின்னர் வவுனியாவிலும், பாடசாலைக்கல்வியின் இறுதியாண்டுகளை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் நிறைவு செய்த இவனுக்கு க.பொ.த. உயர்தரத்தில் அதி சிறந்த பெறுபேறான 3 அதிவிசேட சித்திகள் (3A) முதல்தடவையிலேயே சொந்தமாகின்றது.

இலங்கையின் மொறட்டுவ பல்கலைக்கழத்திற்கு அனுமதி பெற்று அங்கு ஆறு மாதங்கள் தனது பொறியியல் கல்வியைத் தொடர்ந்த வேளையில் தான் மலேசியாவின் University of Nattingham Malaysia பல்கலைக்கழகத்திலிருந்து இவனுக்கு அனுமதி கிடைத்தது. அங்கு முதல் வருடமும், இரண்டாம் வருடக்கல்வியை இங்கிலாந்தில் அதே பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தவன் மூன்றாம் வருடக்கல்வியைத் தொடர்வதற்காய் மீண்டும் மலேசியாவுக்கு வந்த போதுதான் இந்தக் கொடூரம் நடந்தேறியிருக்கின்றது.

நண்பர்களுடன் சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த தாக்குதலாளிகள் இவர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். உண்மையில் தாகுதலாளிகளின் இலக்கு பிறிதொரு கூட்டமாக இருந்த போதும் தெரியாத்தனமாக சாரங்கனும் அவன் நண்பர்களும் வெட்டுக்காயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

26 நவம்பர்... தனது பிறந்ததினத்துக்கு ஆசைமகனின் வாழ்த்துச் செய்திக்காக காத்திருந்த தாய்க்கு எட்டியது மகன் காயத்துக்குள்ளான செய்திதான். செய்தி அறிந்து மலேசியா சென்றவளுக்கு இவன் கிடைத்தான்... அதே புன்னகை மாறாத வதனத்துடன் உயிரற்றவனாக...

அந்த மலர்ச்சாலையில் சோகம் நிரம்பி வழிகின்றது... இவன் இழப்பை இன்னமும் ஏற்காமல் என் மகனைக் காப்பாற்று என இருகை கூப்பி இறைவனை இறைஞ்சும் அப்பா... உனக்காக அழுது கொண்டிருக்கும் அண்ணன் சஞ்சயன்... உன் காலடிகளைக்கட்டி வைத்து கண்ணீர் சிந்தும் ஆசைத்தங்கை சர்மிளா... உன் அம்மாவின் சோகம் வடிப்பதற்கு அப்பாற்பட்டது... சுவரெல்லாம் உன் புத்திசாலித்தனத்தை - குறும்புத்தனத்தைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுகின்றன.

"அவர்களின் குறி என் மகனுமல்ல. அவன் கொலையுமல்ல... விபத்தாக நடந்ததொன்றில்தான் இவன் பிரிந்திருக்கின்றான்...
அவர்களை நான் சபிக்கப் போவதில்லை. மன்னிக்கின்றேன்..." அந்த தந்தையின் இவ்வரிகள் கனத்த வைர வரிகள்.


சகோதரனே... உனது கனவுகள் புதைக்கப்படவில்லை. உன் பாசமிகு அண்ணனும் செல்லத்தங்கையும் நீ விட்டுச்சென்றவைகளை - உன் கனவுகளை ஈடேற்ற தயாராகவே உள்ளனர். சென்று வா சகோதரா... காலம் கை கொடுத்தால் மீண்டும் ஒரு தடவை கை குலுக்குவோம்... உன் ஆத்மா சாந்தியடையட்டும்.

2 comments:

  1. His parents are OK now.. but still its a great lost for them. we visited them 3 days before to tell about a memorial project which we, friends did today after an year. They could not be able to come to this memorial project (which is to provide Lunch & exercise books for 450 children - both orphans & children from camps @ Ratmalana Hindu College) as its hard to remember old memories when they see his friends....

    ReplyDelete

You might also like