Search This Blog

Monday, March 2, 2009

தலைப்பின்றி ஒரு இடுகை

பாலாவின் 'நான் கடவுள்' முடிவினை ஏற்காத என் மனது ஏனோ slumdog millionaire படம் முழுக்க அதனுடன் கூடவே பயணிக்கின்றது. நிச்சயமாக slumdog millionaire ஒஸ்கார் வென்றது அதற்கு காரணமில்லை. பாலாவின் நாயகன் ருத்ரனையும் அவனுடைய செயல்களையும் குறைகூறிய நான், slumdog millionaire இன் Jamal எனும் பாத்திரப்படைப்பை வாழ்நாளில் தரிசிப்பதாய் உணர்கின்றேன். எம்மைச் சுற்றி நடக்கும் சில மனிதாபிமான நடவடிக்கைகள் சின்னப்பையன் Jamalகளை உருவாக்குகின்றனவா என எழுகின்ற சந்தேகங்களுக்கு நியாயம் இல்லாமல் இல்லை. ஆனாலும், எங்கள் Jamalகளும் millionaire களாக உயர்வார்கள்.
(ஒஸ்காரை வென்றெடுத்த
slumdog millionaire படம் தொடர்பான எனது எண்ண ஓட்டங்களை காலம் கை கொடுத்தால் தனிப்பதிவிடுகின்றேன்.)

* * * * *

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளுக்கு ஏதாவது கொண்டுவரும் நண்பன் இம்முறை வெறுங்கையுடன் வந்தான். கேட்டதுக்கு தயார்நிலையில் பதில் இருந்திருக்கவேண்டும். சடாரென வந்தது. "Economic crisis..." (பொருளாதார நெருக்கடி)

எதையும் வேறொன்றாக மாற்றலாமேயொழிய முற்றாக அழிக்க முடியாது. நான் படித்த இரசாயனவியல் கோட்பாடு இப்படித்தான் சொன்னது. ஆகவே, தட்டுப்பாடாகிப் போன உலக்த்தின் நிதி எங்கே போய் ஒளிந்துள்ளது? அல்லது, எப்படி வேறொன்றாக மாற்றம் கொண்டது?

விடை தெரியாத நியாயமான கேள்விகள் இவை. முதலைகள் சில தின்று ஏப்பம் விட்டிருக்க வேண்டும். இல்லையெனில், சில பிசாசுகள் பொத்தி வைத்திருக்க வேண்டும்.

* * * * *

அது சமாதான ஒப்பந்த காலம். மிக நீண்ட நாட்களின் பின்னர் சொந்தங்கள் வீடு தேடி வந்திருந்தார்கள். அப்போது நான்கு வயதான டிலக்சனும் கூடவே வந்திருந்தான்.

அப்போதெல்லாம் தாழப்பறக்கும் வானூர்திகளை நோக்கி நாங்கள் கையசைத்திருக்கின்றோம்.
அதில் பூச்சொரியும் தேவர்கள் தான் போகின்றார்கள் என எண்ணி, வீட்டு முற்றத்துக்கு ஓடி வந்து ஆர்ப்பரித்திருக்கின்றோம்.

அன்றும் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமிலிருந்து
உலங்குவானூர்தியொன்று மேலெழும்புகின்றது. அக்காட்சியை டிலக்சன் ஆவல் மேலிட பார்த்து மகிழ்வான் என்று எண்ணி, ஓடிச்சென்று தூக்கிக் கொண்டுவந்து அவனுக்கு புதினம் காட்டினேன். அப்போது அவன் என்னைக் கட்டிக்கொண்டு வீறிட்டுக் கத்தினானே... அந்த அழுகை ஆயிரம் சம்மட்டிகள் ஒன்றாக என் தலையில் இறங்கியதாய் உணர்ந்தேன். குற்ற உணர்ச்சி மேலிட அவன் அன்னையின் மடியில் பத்திரமாக அவனை ஒப்படைத்தேன்.

இன்று தினமும் வெளிவருகின்ற கணக்குச் சூத்திரத்தில் அந்தப்பிஞ்சு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணின் பரப்பளவு சுருங்கிக் கொண்டு போகின்றது.

* * * * *

"பிரணாப்பின் சுருதி மாறி விட்டது. எங்களுக்கு நல்ல காலம் பிறக்குதாம்..." பழைய கள்ளு புதுச் சிரட்டையில் தரப்படப்போவது புரிந்திருந்தும், சில வேதாள மனங்கள் திரும்பவும் முருங்கை மரம் நாடுகின்றன.

ஆனால், மிக விரைவில் அங்கு வரப்போகும் தேர்தலுக்கான அரங்குகள் திறக்கப்பட்டு விட்டன.


* * * * *

வடிவேலும், விவேக்கும் பாவப்பட்ட ஜீவன்கள்...! எத்தனையோ படங்களில் எவ்வளவு நகைச்சுவை பண்ணினாலும், அவர் ஒருத்தர் தூக்கம் கலைந்து எழுதுகின்ற அறிக்கைகள் உலகத்தரம் வாய்ந்த "ஜோக்"குகள் நிறைந்தவை.

ஐயகோ... பாசப்பிணைப்புக்களே...!
எங்கேயோ ஒரு சதி நிகழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில்
ஒஸ்காருக்காக ரஹ்மானுடன் கலைஞரும் இணைந்திருக்க வேண்டுமல்லவா?
ஒருத்தர் இசைக்காக...
மற்றவர் வசைக்காக...

4 comments:

  1. //எதையும் வேறொன்றாக மாற்றலாமேயொழிய முற்றாக அழிக்க முடியாது. நான் படித்த இரசாயனவியல் கோட்பாடு இப்படித்தான் சொன்னது. ஆகவே, தட்டுப்பாடாகிப் போன உலக்த்தின் நிதி எங்கே போய் ஒளிந்துள்ளது? அல்லது, எப்படி வேறொன்றாக மாற்றம் கொண்டது?//

    அது அமெரிக்காவில் ஆட்களில்லா வீடுகளாக மாறி எலிக ளும் சிலந்திகளும் வசிக்கும் நிலையில் இருக்கிறன..

    //இன்று தினமும் வெளிவருகின்ற கணக்குச் சூத்திரத்தில் அந்தப்பிஞ்சு வாழ்ந்து கொண்டிருக்கும் மண்ணின் பரப்பளவு சுருங்கிக் கொண்டு போகின்றது.//

    இப்போது அவன் அழமாட்டான்...

    //ஐயகோ... !//
    உந்த வார்த்தையை எந்த மூதேவி கண்டுபிடித்ததது? அவனை முதல்ல போட்டுத்தள்ளோணும்... கவிதை எழுதுறத்துக்கு உதே கன பேருக்கு மூலதனமாப்போட்டுது.. ஐயகோ!

    ReplyDelete
  2. slumdog millionaire அறிமுகத்திற்கு நன்றி. இன்னும் முடியவில்லை. விரைவில் பார்க்க இருக்கிறேன்.

    ReplyDelete
  3. தமிழ் மதுரம்March 6, 2009 at 10:59 PM

    ஆதிரை நல்ல கேள்வி....

    பாவம் கொலைஞர்....

    அவர் அடுத்த படமாக ‘’வன்னி மக்களை மீட்கும் நகைச்சுவை ; என்ற தலைப்பில் எடுக்கப் போவதாக கேள்வி...

    ReplyDelete
  4. //ஆனாலும், எங்கள் Jamalகளும் millionaire களாக உயர்வார்கள்.//
    //அவர் ஒருத்தர் தூக்கம் கலைந்து எழுதுகின்ற அறிக்கைகள் உலகத்தரம் வாய்ந்த "ஜோக்"குகள் நிறைந்தவை.
    ஐயகோ... பாசப்பிணைப்புக்களே...!
    ஒருத்தர் இசைக்காக...
    மற்றவர் வசைக்காக..//

    ReplyDelete

You might also like